என்னால் திமுகவுக்கு பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன்: நடிகர் ராதாரவி


என்னால் திமுகவுக்கு பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன்: நடிகர் ராதாரவி
x
தினத்தந்தி 25 March 2019 3:59 AM GMT (Updated: 25 March 2019 4:01 AM GMT)

நான் பேசியது உங்கள் மனதை புன்படுத்தி இருந்தால் அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு, நடிகர் ராதாரவி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

கொலையுதிர் காலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ராதாராவி, ‘சினிமாத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் ஒரு லெஜண்ட் ஆவார்கள். அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். அவர்களுடன் எல்லாம் நயன்தாராவை ஒப்பிடுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நயன்தாரா நல்ல நடிகை, இவ்வளவு நாள் திரையுலகில் நிலைப்பதே பெரிய விஷயமாகும். அவரைப் பற்றி வராத செய்தியே கிடையாது. அதெல்லாம் தாண்டி நிற்கிறார்கள். 

தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை 4 நாட்கள் மட்டுமே ஞாபகம் வைத்திருப்பார்கள். பிறகு விட்டுவிடுவார்கள். நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என பேசியிருந்தார் ராதாரவி.

ராதாரவியின் மேற்கூறிய கருத்துக்கள்  கடும் சர்ச்சையானது. சமூக வலைதளங்களில், ராதாரவியின் கருத்துக்கள் கடும் விமர்சனத்துக்குள்ளாப்பட்டதுடன், அவருக்கு எதிராக கண்டனங்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர். 

இந்த நிலையில்,  நடிகை நயன் தாரா தொடர்பாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ராதாரவி தெரிவித்துள்ளார். கொலையுதிர்காலம் டிரைலர் வெளியீட்டு விழாவில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. நான் பேசியது உங்கள் மனதை புன்படுத்தி இருந்தால் அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு, ராதாரவி விளக்கம் அளித்துள்ளார். அதேபோல், திமுகவில் இருந்து தானே விலகி கொள்வதாகவும் ராதாரவி அறிவித்துள்ளார்.


Next Story