துரைமுருகன் வீட்டில் இருந்து கணக்கில் வராத 10.50 லட்சம் பறிமுதல்: வருமான வரித்துறை


துரைமுருகன் வீட்டில் இருந்து கணக்கில் வராத 10.50 லட்சம் பறிமுதல்: வருமான வரித்துறை
x
தினத்தந்தி 30 March 2019 3:54 PM GMT (Updated: 30 March 2019 4:08 PM GMT)

துரைமுருகன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.10.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

காட்பாடி,

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காந்திநகர் பகுதியில் உள்ள துரைமுருகன் வீட்டிற்கு, வருமானவரித் துறை துணை ஆணையர் விஜய் தீபன் தலைமையில் மூன்று அதிகாரிகள் நேற்றிரவு சென்றனர். இதனிடையே, அங்கு திரண்ட திமுகவினர், முறையான ஆவணங்கள் இன்றி சோதனை நடத்த வந்ததாக கூறி, வருமான வரித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆவணம் இல்லாமல் சோதனை நடத்த அதிகாரிகள் வந்ததாகவும், கேள்விகளுக்கு மாறி, மாறி பதில் அளித்ததாகவும் திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் தெரிவித்தார். சட்டரீதியாக சோதனையிட வந்தால் ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். இதைத்தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு துரைமுருகன் வீட்டிற்குள் சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காலை 5 மணியளவில் மேலும் 3 அதிகாரிகளும் அங்கு வந்து சோதனை நடத்தி வருகின்றனர். 

பல மணி நேரம் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி அளித்த தகவலின் பேரில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும்,  துரைமுருகன் வீடு, அவரது மகனின் பள்ளி, கல்லூரியில் நடந்த சோதனை நிறைவுபெற்றது எனவும், சோதனையில், கணக்கில் வராத ரூ.10.50 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்  வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Next Story