துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் வனவிலங்குகளை வேட்டையாடிய 4 பேர் கைது ஓட்டல்களுக்கு இறைச்சி விற்றது அம்பலம்


துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் வனவிலங்குகளை வேட்டையாடிய 4 பேர் கைது ஓட்டல்களுக்கு இறைச்சி விற்றது அம்பலம்
x
தினத்தந்தி 5 May 2019 11:03 PM GMT (Updated: 5 May 2019 11:03 PM GMT)

வனவிலங்குகளை வேட்டையாடி இறைச்சியை ஓட்டல்களுக்கு விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை,

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே செம்மேடு கிராமத்தில் சிலர் மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் செம்மேடு கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 48) வீட்டில் ஒரு கிலோ கடமான் கறி சமைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடமான் வேட்டையில் ஈடுபட்டதாக பாலகிருஷ்ணன், துரைசாமி (62), சுந்தர்ராஜ் (51), கேரள மாநிலம் நெடும்பாறையைச் சேர்ந்த பிரகாஷ் (29) ஆகிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து வன அதிகாரிகள் கூறியதாவது:-

கேரள எல்லையை ஒட்டிய தமிழக பகுதியான செம்மனாம்பதி அருகே கேரள மாநிலத்தை சேர்ந்த டாக்டர் ஷாஜூவுக்கு சொந்தமான 200 ஏக்கர் தோட்டம் உள்ளது. அவர் தற்போது குவைத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலத்தின் ஒரு பகுதி மாந்தோப்பும், மறுபகுதி காடாகவும் உள்ளது. இங்கு சென்றுதான் இந்த கும்பல் கடமானை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி உள்ளனர்.

அதில் சிறிதளவு இறைச்சியை பாலகிருஷ்ணன் வீட்டில் சமைத்துள்ளனர். மீதம் இருந்த இறைச்சியை கேரள மாநிலத்தில் உள்ள சில ஓட்டல்களில் விற்பனை செய்துள்ளனர். இதேபோல் தொடர்ந்து மான்களை வேட்டையாடி திருப்பூரில் உள்ள குறிப்பிட்ட ஒரு சில ஓட்டல்களுக்கு இந்த கும்பல் தொடர்ந்து சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.

லேத் பட்டறை நடத்தி வந்த பாலகிருஷ்ணன் ஒற்றைக்குழல் மற்றும் இரட்டைக்குழல், கைத்துப்பாக்கி ஆகியவற்றை அதிகளவில் தயாரித்துள்ளார். அதற்கான தோட்டாக்களை கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாங்கி உள்ளார். சோதனையின்போது மான் தலை, 2 கொம்புகள், தோல், ஒரு துப்பாக்கி, ஒரு கத்தி, துப்பாக்கி தயாரிக்க வைத்திருந்த உபகரணங்கள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

முக்கிய குற்றவாளியான தமிழரசன் (38) தலைமறைவாக உள்ளார். அவர் யானையை கொன்று தந்தம் வேட்டையாடிய வழக்கில் 2005-ம் ஆண்டு வனத்துறையினரால் கைது செய்யப்பட்டவர். அந்த வழக் கில் 2017-ம் ஆண்டு அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்த தமிழரசன் ஜாமீனில் வெளியே வந்தார். வனவிலங்குகளை வேட்டையாடியதாக கும்பல் சிக்கியதை அடுத்து அவர் தலைமறைவாகி விட்டார்.

கைதானவர்களின் குற்றம் உறுதி செய்யப்பட்டால் 5 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். தமிழரசன் இதற்கு முன்பும் வனவிலங்குகளை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்டு இருப்பதால் அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story