தங்க தமிழ்செல்வன் தி.மு.க.வில் இணைவார்; அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி


தங்க தமிழ்செல்வன் தி.மு.க.வில் இணைவார்; அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி
x
தினத்தந்தி 8 May 2019 11:48 AM GMT (Updated: 8 May 2019 11:48 AM GMT)

தங்க தமிழ்செல்வன் தி.மு.க.வில் இணைவார் என அமைச்சர் செல்லூர் ராஜு இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மதுரை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் மதுரையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சி, அம்மா ஆட்சி என சும்மா சொல்கிறீர்கள்.  ஊழல் ஆட்சிதான் நடக்கிறது. துரோகிகள் ஆட்சி நடக்கிறது. டி.டி.வி. தினகரனை முதல்வராக்க இந்த ஆட்சியை கலைப்போம்.

கலைப்பது தப்பில்லையே? இந்த இடைத்தேர்தலில் 22 சீட்டு வென்றோம் என்றால் நாளைக்கு எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கவர்னரிடம் கொடுக்க வேண்டும். அப்போது நாங்க அ.தி.மு.க.வுக்கு எதிராகத்தான் ஓட்டு போடுவோம்.

தி.மு.க.வும் அ.தி.மு.க.விற்கு எதிராக ஓட்டுப்போடும், காங்கிரசும் எதிராக தானே ஓட்டு போடும், முஸ்லீம் லீக்கும் எதிராக தானே ஓட்டுப்போடும்.  அப்போ நாங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டோம் என்று அர்த்தமா? பிறகு ஏன் நான் சொன்னது தப்பு என்று சொல்கிறீர்கள் என கூறினார்.

இந்த நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, செந்தில் பாலாஜியை தொடர்ந்து தங்க தமிழ்செல்வனும் அ.ம.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைவார் என்று கூறினார்.

Next Story