இல்லாத இந்தி திணிப்பை காரணமாக காட்டி சுயலாப போராட்டங்கள் நடத்த சிலர் ஆயத்தமாகி வருகிறார்கள் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்


இல்லாத இந்தி திணிப்பை காரணமாக காட்டி சுயலாப போராட்டங்கள் நடத்த சிலர் ஆயத்தமாகி வருகிறார்கள் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்
x
தினத்தந்தி 2 Jun 2019 9:30 PM GMT (Updated: 2 Jun 2019 8:36 PM GMT)

இல்லாத இந்தி திணிப்பை காரணமாக காட்டி சுயலாப போராட்டங்கள் நடத்த சிலர் ஆயத்தமாகி வருகிறார்கள் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் குழு மத்திய அரசுக்கு ஓர் பரிந்துரை அனுப்பியுள்ளது. அந்த பரிந்துரையில் மும்மொழிக்கொள்கை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அது மத்திய அரசால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. முடிவும் செய்யப்படவில்லை. ஆனால் அதற்கு முன்பே ஏதோ இந்தி திணித்து விடுவதைப்போல மு.க.ஸ்டாலின், வைகோ, ப.சிதம்பரம், ரா.முத்தரசன் போன்றவர்கள் கடுமையான கண்டனத்தை இல்லாத இந்தி திணிப்பை நோக்கி செலுத்தியிருக்கிறார்கள்.

எங்கேயாவது போராட்டம் நடத்த வழி கிடைக்காதா? என தேடித்திரிபவர்கள், இல்லாத இந்தி திணிப்பை காரணமாக கொண்டு சுயலாப போராட்டங்கள் நடத்தலாம் என சிலர் ஆயத்தமாகி வருகிறார்கள். முன்னாள் மத்திய மனித வள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் எந்த மொழியும் எந்த மாநிலத்திலும் திணிக்கப்படாது என்றும், மத்திய மனித வள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் போக்ரியால் நிஷாங் இந்தி திணிக்கும் எண்ணமில்லை என்றும் கூறியிருக்கின்றனர். இதே கருத்தை பிரதமர் அலுவலகமும் தெரிவித்து இருக்கிறது.

மும்மொழிக்கொள்கை என்பது பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. கொள்கை முடிவு அல்ல என்பதை தெளிவாகச் சொன்ன பிறகும் ஏதோ இந்தி திணிக்கப்பட்டதை போல கருத்துகளை தெரிவிப்பது சரியல்ல. கஸ்தூரிரங்கன் குழு எப்படி இப்படி ஒரு அறிக்கை தரலாம் என மு.க.ஸ்டாலின் கேட்கிறார். அறிக்கை கொடுக்கலாம் அதை ஏற்றுக்கொண்டால்தானே கொள்கை முடிவு. மு.க.ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சிக்கு ஏன் கையெழுத்திட்டார்? முதலிலேயே முடியாது என்று சொல்லவில்லையே.

ஆக இனித்தால் படிக்கலாம் திணித்தல் இல்லையென்றும், விருப்பம் இருந்தால் படிக்கலாம் வெறுப்பு இருந்தால் வேண்டாம் என்றும், தேவையென்றால் படிக்கலாம் தேவை இல்லையென்றால் விட்டுவிடலாம் இது வெறும் வரைவு அறிக்கைதான் என்றும் சொல்லியாகிவிட்டது. ஆக ஏதாவது காரணம் கிடைக்காதா? போராட்டம் நடத்தலாம் என காத்துக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள் ஏமாந்துதான் போவார்கள்.

இதைவிட வேடிக்கை என்னவென்றால் காங்கிரஸ் முதல்-அமைச்சர் பக்தவச்சலம் ஆட்சி காலத்தில்தான் இந்தி திணிப்பும், எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கி சூடும் நடந்தது. அதை எல்லாம் மறந்துவிட்டு இன்றைய காங்கிரஸ்காரர்கள் தி.மு.க.வுடன் சேர்ந்து இந்தியை எதிர்ப்பதாக சொல்வதுதான் நாடகம். இந்தியை மத்திய அரசின் அலுவல்களில் பயன்பாட்டை அதிகரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக செயல்பட்ட ப.சிதம்பரம் இந்தி பயன்பாட்டை கண்டிப்பது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story