ராகுல் தலைவர் பதவியை ஏற்காதபட்சத்தில் அடுத்த தலைவர் பற்றி முடிவெடுக்கப்படும்; திருநாவுக்கரசர்


ராகுல் தலைவர் பதவியை ஏற்காதபட்சத்தில் அடுத்த தலைவர் பற்றி முடிவெடுக்கப்படும்; திருநாவுக்கரசர்
x
தினத்தந்தி 4 July 2019 2:46 AM GMT (Updated: 4 July 2019 2:46 AM GMT)

ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்காதபட்சத்தில் அடுத்த தலைவர் பற்றி முடிவெடுக்கப்படும் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களை கைப்பற்றி படுதோல்வி அடைந்தது.  இதைத்தொடர்ந்து கடந்த மே 25ந்தேதி நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். அத்துடன் புதிய தலைவரை தேர்ந்தெடுத்து கொள்ளுமாறும் கூறினார்.

ஆனால் அதை ஏற்க மறுத்த காங்கிரஸ் தலைவர்கள், தலைவர் பதவியில் நீடிக்குமாறு ராகுல் காந்தியை தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். ராகுல் காந்தி பதவி விலக எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பதவி விலக முன்வந்தனர்.

காங்கிரஸ் முதல்-மந்திரிகள் அசோக் கெலாட் (ராஜஸ்தான்), கமல்நாத் (மத்தியபிரதேசம்), அமரிந்தர் சிங் (பஞ்சாப்), பூபேஷ் பாகல் (சத்தீஷ்கார்), நாராயணசாமி (புதுச்சேரி) ஆகியோர் கடந்த திங்கட்கிழமை டெல்லியில் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து, பதவி விலகல் முடிவை கைவிட்டு, தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்குமாறு வற்புறுத்தினார்கள்.

இதனால், ராஜினாமா முடிவை ராகுல் காந்தி வாபஸ் பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ராஜினாமாவை ஏற்கனவே தாக்கல் செய்து விட்டதாகவும், தற்போது தான் காங்கிரஸ் தலைவர் இல்லை என்றும், காரிய கமிட்டியை விரைவில் கூட்ட வேண்டும் என்றும், தாமதமின்றி புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதன்பிறகு ராகுல் காந்தி அதிகாரபூர்வமாக தனது ராஜினாமாவை அறிவித்தார்.  இதுபற்றி அக்கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ராகுல் காந்தியின் ராஜினாமாவை காரிய கமிட்டி ஏற்று, புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை ராகுல் காந்தி தலைவராக நீடிப்பார் என்று தெரிவித்தன.

இந்நிலையில், ராகுல் காந்தியின் ராஜினாமா பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறும்பொழுது, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம்.  ஆனால், அதை அவர் ஏற்காதபட்சத்தில் செயற்குழுவை கூட்டி அடுத்த தலைவர் குறித்து முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Next Story