9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்


9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 12 July 2019 10:07 AM GMT (Updated: 12 July 2019 10:07 AM GMT)

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில், மூன்று வெவ்வேறு காரணிகளால், லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்  இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் காட்பாடியில் 3 சென்டி மீட்டர் மழையும், திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

Next Story