12ஆம் வகுப்பு பாடப்புத்தகம் விவகாரம்: இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா? மு.க.ஸ்டாலின்


12ஆம் வகுப்பு பாடப்புத்தகம் விவகாரம்: இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா? மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 26 July 2019 2:50 PM GMT (Updated: 26 July 2019 2:50 PM GMT)

12 ஆம் வகுப்பு பாடப்புத்தகம் விவகாரத்தில் காவியை பூசிக் கொள்பவர்கள் ஆட்சியில் இதுதானே நடக்கும்? என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  12ம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் மொழியியல் ஆராய்ச்சியாளர் ஜார்ஜ்.எல்.ஹெர்ட் எழுதிய 'The Status of Tamil as a Classical Language' என்னும் பகுதி இடம் பெற்றுள்ளது. 

அதில் தமிழ் கி.மு. 300ஆண்டில் உருவானதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதே நேரம் சீன மொழி கி.மு. 1250 ஆண்டிலும், சமஸ்கிருதம் கி.மு.2000 ஆண்டிலும், கிரேக்கம் கி.மு.1500 ஆண் ஆண்டிலும் உருவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ள நிலையில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில்  கூறியிருப்பதாவது:-

எப்படிச் சகிப்பது இக்கொடுமையை? தமிழ் 2300ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாம். ஆனால் சமஸ்கிருதமோ 4000ஆண்டுகள் பழமையானதாம்.  இப்படித்தான் சொல்கிறது தமிழக அரசின் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகம். காவியை பூசிக் கொள்பவர்கள் ஆட்சியில் இதுதானே நடக்கும்? இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா? என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும்  இது குறித்த தனது கண்டனங்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் 'தொன்மையுடைய நம் முதுமொழி தமிழ். 300 ஆண்டுகள்தான் பழமைமையானது என்று 12 ம் வகுப்புபாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டிருப்பதாக, வந்திருக்கும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனே மாற்றப்படவேண்டும், தவறு நடக்க காரணமானவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story