‘முத்தலாக்’ உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஆதரவு: ‘பா.ஜ.க.வின் மறுபதிப்பாக அ.தி.மு.க. மாறி இருக்கிறது’ மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


‘முத்தலாக்’ உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஆதரவு: ‘பா.ஜ.க.வின் மறுபதிப்பாக அ.தி.மு.க. மாறி இருக்கிறது’ மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 26 July 2019 10:15 PM GMT (Updated: 26 July 2019 8:23 PM GMT)

‘முத்தலாக்’ உள்பட மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவித்ததால், பா.ஜ.க. மறுபதிப்பாக அ.தி.மு.க. மாறி இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மெஜாரிட்டி, மைனாரிட்டி என்பது இப்போது கேள்வியல்ல என்று, செயற்கையாக நியாயப்படுத்துவதற்காகப் பேசி, முத்தலாக் மசோதாவிற்கு மக்களவையில் அ.தி.மு.க. ஆதரவு அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது அ.தி.மு.க.விற்குள் இருக்கும் இரட்டைத் தலைமையின் இரட்டை வேடத்தை பளிச்சென வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

சிறுபான்மையின மக்களின் நலனை அ.தி.மு.க. ஒரு போதும் விட்டுக் கொடுக்காது என்று, உதட்டளவில் பேசிக் கொண்டிருக்கும் முதல்- அமைச்சர் பழனிச்சாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் திரைமறைவில் பா.ஜ.க.வுடன் இரண்டறக் கலந்து விட்டார்கள் என்பதை முத்தலாக் மசோதாவிற்கு தெரிவித்துள்ள ஆதரவு வெளிப்படுத்தியிருக்கிறது.

குத்தகை

கடந்த முறை இதே முத்தலாக் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது இது பா.ஜ.க.வின் “கம்யூனல் அஜெண்டா” என்று கடுமையாக தாக்கிப் பேசினார் அ.தி.மு.க.வின் ராம நாதபுரம் எம்.பி. அன்வர் ராஜா. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ, முத்தலாக் சொல்வோருக்கு 3 வருட சிறை தண்டனை ரத்து, விவகாரத்து செய்யப்படும் இஸ்லாமிய பெண்ணுக்கு ‘ஒன் டைம் செட்டில்மென்ட்’, ‘குழந்தைகளுக்கு வாழ்வாதார நிதி’ உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தி, இந்த மசோதாவிற்கு தமிழக அரசின் சார்பில் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம் என்றார்.

ஆனால் இன்றைக்கு நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் தன் பதவியைக் காப்பாற்றித் தக்க வைத்துக் கொள்ள பழனிசாமியும், தனது மகனுக்கு எப்படியாவது மத்திய மந்திரி பதவி பெற்றுவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வமும் கூட்டணி சேர்ந்து விட்டார்கள். அ.தி.மு.க.வையும் அ.தி.மு.க. அரசையும் பா.ஜ.க.விடம் ஒட்டுமொத்த குத்தகைக்கு நிரந்தரமாக விட்டுள்ளார்கள். ஆகவே தான் இப்போது முத்தலாக் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது அந்த மசோதாவை ஆதரித்திருக்கிறார்கள்.

மறுபதிப்பு

முத்தலாக் மசோதாவில் மட்டுமல்ல மோட்டார் வாகனப் போக்குவரத்து சட்ட திருத்த மசோதாவிற்கு முதலில் தமிழக அரசின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த மசோதாவிற்கும் பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்துள்ளது அ.தி.மு.க.

இப்போது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தகவல் பெறும் சட்ட திருத்த மசோதாவிற்கும் மனப்பூர்வமாக ஆதரவு அளித்து பா.ஜ.க.வின் மறு பதிப்பாகவே அ.தி.மு.க. மாறியிருக்கிறது.

சிறுபான்மையின மக்களின் நலன், மாநிலத்தின் நலன், மாநிலத்தின் உரிமைகள் எல்லாம் அ.தி.மு.க.வின் பதவி தேடும் பேராசைக் கண்களுக்குத் துளி கூடத் தெரியவில்லை. ஆகவே தனியாக அ.தி.மு.க. என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றுவதை இனியாவது நிறுத்திக் கொண்டு பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டு விடலாம்.

அ.தி.மு.க. தேவை இல்லை

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கொள்கையே எங்கள் கொள்கை என்று செயல்படுவதற்கு மறைந்த எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க. என்ற பெயர் தேவையில்லை.

ஆகவே இரட்டைத் தலைமையாக இருந்து கொண்டு தமிழகத்தில் ஒரு நாக்காகவும், பாராளுமன்றத்தில் இன்னொரு நாக்காகவும் செயல்பட்டு, தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று முதல்-அமைச்சர் பழனிச்சாமியையும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story