திருச்சியில் வேன் கவிழ்ந்து பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் நிதியுதவி அறிவிப்பு


திருச்சியில் வேன் கவிழ்ந்து பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் நிதியுதவி அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Aug 2019 4:34 AM GMT (Updated: 19 Aug 2019 4:34 AM GMT)

திருச்சியில் வேன் கவிழ்ந்து பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் பழனிசாமி நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசீலன் (வயது 63). திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மனைவி எழிலரசி (50). இவர்களின் மகன் சதீஷ்குமாருக்கும் (30), உப்பிலியபுரம், எஸ்.என்.புதூரை சேர்ந்த சுசீலாவுக்கும் (24) 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

எஸ்.என்.புதூரில் உள்ள கருப்புசாமி கோவிலில் நடந்துவரும் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக சதீஷ்குமாரும், சுசீலாவும் முன்கூட்டியே சென்றுவிட்டனர். குணசீலன், தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் நேற்று காலை ஒரு சரக்கு வேனில் புறப்பட்டார். வேனில் டிரைவர் உள்பட 17 பேர் பயணம் செய்தனர். வேனை அதே ஊரை சேர்ந்த இளையராஜா (36) ஓட்டினார். எரகுடி அருகே மதியம் 1.30 மணி அளவில் வேன் சென்றுகொண்டிருந்தது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கிணற்றில் தலைகுப்புற பாய்ந்தது. வேனில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த தனியார் பஸ்சின் டிரைவர் அதிர்ச்சியடைந்து பஸ்சை நிறுத்தினார். பஸ்சில் இருந்தவர்கள் உப்பிலியபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கிணற்றில் தண்ணீர் அதிகம் இல்லாமல் சேறும், சகதியுமாக இருந்தது. உயிருக்கு போராடியவர்களை மீட்க 6 தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் கயிறுகட்டி இறங்கினர். அப்போது, சம்பவ இடத்திலேயே குணசீலன்-எழிலரசி தம்பதி மற்றும் இவர்களின் உறவினர்களான குமாரத்தி (52), கோமதி (40), கயல்விழி (35), சஞ்சனா (4), யமுனா (10), சரண்குமார் (16) ஆகிய 8 பேர் பலியானது தெரியவந்தது.

மேலும் கிணற்றுக்குள் படுகாயத்துடன் டிரைவர் இளையராஜா உள்பட 9 பேர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். தீயணைப்பு வீரர்கள் அவர்களை கயிற்றை கட்டி மீட்டனர். அவர்களை உடனடியாக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்தவர்களின் உடல்களும் கயிறு கட்டி மேலே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் விபத்தில் பலியான 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.  இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

Next Story