தினகரனை அடையாளம் காட்டியதே நான்தான்... வெளியான பரபரப்பு ஆடியோ.. அமமுகவில் இருந்து விலகுகிறாரா புகழேந்தி?


தினகரனை அடையாளம் காட்டியதே நான்தான்... வெளியான பரபரப்பு ஆடியோ.. அமமுகவில் இருந்து விலகுகிறாரா புகழேந்தி?
x
தினத்தந்தி 9 Sep 2019 8:40 AM GMT (Updated: 9 Sep 2019 8:40 AM GMT)

'தினகரனை அடையாளம் காட்டியதே நான்தான்' என்று வெளியான பரபரப்பு ஆடியோவால் அமமுகவில் இருந்து புகழேந்தி விலகுகிறாரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கடந்த 6-ம் தேதி கோவை சென்றுள்ளார்.  அவர், ஒரு ஓட்டலில் அமமுக  நிர்வாகிகளுடன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. 

அதில் புகழேந்தி,  "ஒண்ணும் தப்பா நினைக்காதீங்க. என்னன்னு கேட்டீங்கன்னா, போற இடத்திலேயேயும் இருக்கிற இடத்திலேயேயும் நமக்கு முகாந்திரம் இல்லாமல் இனிமேல் இருக்கக் கூடாது. கரெக்ட்டான ஃப்யூச்சரையும் நமக்கான பொசிஷனையும் சரிபண்ணிட்டுத்தான் நாம போகணும். அந்த ஐடியாவோடுதான் நான் உட்கார்ந்துக்கிட்டு இருக்கேன். அந்தப் பட்டியலையும் ரெடி பண்ணி வைக்கிறேன். இங்கு யார் கிட்டேயும் போய் நிற்க எனக்கு இஷ்டமில்லை. எல்லோரையும் திருப்தி பண்ணி, அட்ரஸ் இல்லாமல் 14 வருஷம் வெளியில் இருந்த  டி.டி.வி.தினகரனை  ஊருக்குக் காண்பித்ததே நான்தான். ஜெயலலிதா சாவில் கூட அவர் கிடையாது. யோசனை பண்ணி உங்ககிட்ட பேசுறேன்" என்று முடிகிறது வீடியோ.

புகழேந்தியின் பேச்சு, அ.ம.மு.க வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாகப் பேசிய பெரம்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல், "தினகரனை அடையாளப்படுத்தியதாக புகழேந்தி கூறுவது சரியல்ல. அவர் பேசுவதை பார்த்தால் வேறு கட்சிக்கு செல்வதைப் போல் தெரிகிறது. புகழேந்தி கட்சியை விட்டு சென்றால் வருத்தப்படுவேன்" என கூறினார்.

இதுகுறித்து புகழேந்தி கூறும் போது, "ஊர்ஊராக சென்று தினகரனை நான் தான் அடையாளப்படுத்தினேன். அந்த வீடியோவில் எந்த இடத்திலும் நான் கட்சியில் இருந்து விலகப்போவதாக கூறவே இல்லை. என்னை அசிங்கப்படுத்த அமமுக ஐடி பிரிவு இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளது. சின்னமா என்ன சொல்கிறார்களோ  அதற்கு கட்டுப்படுகிறேன்" என கூறி உள்ளார்.



Next Story