குரூப்-2 தேர்வில் தனி பகுதியாக இருந்த மொழிப்பாடம் நீக்கப்பட்டது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி -வைகோ


குரூப்-2 தேர்வில் தனி பகுதியாக இருந்த மொழிப்பாடம் நீக்கப்பட்டது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி -வைகோ
x
தினத்தந்தி 28 Sep 2019 4:45 AM GMT (Updated: 28 Sep 2019 4:47 AM GMT)

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வில் தனி பகுதியாக இருந்த மொழிப்பாடம் நீக்கப்பட்டது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி என்று வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

குரூப் 2 தேர்வுக்கான பாடத் திட்டங்களை மாற்றி அமைத்து, புதிய பாடத் திட்டத்தினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 2 மற்றும் குரூப் 2-ஏ ஆகிய இரு பதவிகளுக்கும் இனி ஒரே தேர்வாக, முதனிலை மற்றும் முதன்மை எழுத்து தேர்வு கொண்டவையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 

மேலும், முதனிலை தேர்வில் இதுவரை கேட்கப்பட்டு வந்த பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் தேர்வுகள் நீக்கப்பட்டு, 2-ஆம் கட்டமாக நடைபெறும் முதன்மை தேர்வுக்கு, கூடுதல் முக்கியத்துவத்துடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோன்று முதல்நிலை தேர்வில், பொது அறிவுத்தாள் தேர்வாக இருந்தாலும், அதில் தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாடு, சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு, சமுதாய மறுமலர்ச்சி இயக்கங்கள், திருக்குறள் உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், மொழி பாட தேர்வுகளை, விரிவாக விடையளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பணியாளர் தேர்வு ஆணையம் உடனடியாக புதிய பாடத்திட்ட தேர்வு முறையை திரும்பப்பெற வேண்டும் என்று மதிமுக  பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ தெரிவித்துள்ளார். மேலும்,  டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் தனி பகுதியாக  இருந்த மொழிப்பாடம் நீக்கப்பட்டது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி  எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.

Next Story