சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோயை தடுக்க 160 வாகனங்கள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோயை தடுக்க 160 வாகனங்கள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Oct 2019 9:09 PM GMT (Updated: 10 Oct 2019 9:09 PM GMT)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோயை தடுக்க, 160 வாகனங்களை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழகத்தில் ‘டெங்கு’ காய்ச்சல் தடுப்புக்காக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைக்காக 160 வாகனங்கள் வழங்கப்பட்டன.

இந்த வாகனங்களை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு நிலவேம்பு குடிநீரை அமைச்சர் வழங்கினார்.

பின்னர் நடைபேற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் பருவமழை தொடங்கியதை முன்னிட்டு, காய்ச்சல் பரவுவதை தடுக்க 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொசு ஒழிப்பு பணியாளர்களும், மேற்பார்வையாளர்களும் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மருந்துக்கடைகளில் பொதுமக்களுக்கு, மருத்துவரின் உரிய பரிந்துரையின்றி மருந்துகள் வழங்கக் கூடாது என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறை மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலவேம்பு குடிநீர்

இந்திய மருத்துவ முறையின் பாரம்பரிய மருந்தான நிலவேம்பு குடிநீர், அரசு மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு, இயற்கையாக காய்ச்சல் குணமடைய ஊக்குவிக்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவைகளில் டெங்கு காய்ச்சலின் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அதில் மக்களின் பங்கு குறித்தும் உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

பொது கட்டிடங்கள், உணவகங்கள், திரையரங்குகள், கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளில், கொசு உற்பத்தியாகும் இடங்களை ஆய்வு செய்து, கொசுக்களை அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மருத்துவ கையேடு மற்றும் புத்தகம் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ், மக்கள் நல்வாழ்வுத்துறை இணைச் செயலாளர் நடராஜன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் மதுசுதன் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story