மோடி வருகை: டுவிட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்


மோடி வருகை: டுவிட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்
x
தினத்தந்தி 11 Oct 2019 8:10 AM GMT (Updated: 11 Oct 2019 8:10 AM GMT)

பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்துள்ளதையடுத்து அவரது வருகைக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து ஹேஷ்டேக் மூலம் டுவிட்டரில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

சென்னை,

சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று வர இருப்பதையொட்டி, சென்னை நகரம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அவரும், பிரதமர் மோடியும் சந்தித்து பேச இருக்கும் மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை வரவேற்கும் வகையில் #TNwelcomesXiJinping என்ற ஹேஷ்டேக் மூலம் ஒரு தரப்பினர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இன்னொரு பக்கம் பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு தரப்பினர் #GoBackModi என்ற ஹேஷ்டேக் மூலம் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. 

இதற்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் அடையாளமாக #TNwelcomesModi என்ற ஹேஷ்டேக் மூலம் பிரதமர் மோடியை வரவேற்று தங்கள் கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். மாமல்லபுரம் போன்ற வரலாற்று புகழ்பெற்ற இடத்தில் நடக்கும் சந்திப்பு தமிழகத்திற்கு பெருமை என்றும் இப்படி மோதல் போக்கை தொடர்வது நாட்டின் நலனுக்கு நல்லதல்ல என்றும் பலர் ட்வீட் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், “திரும்பி போ, திரும்பி போ என்று சொல்லி அவர் வரமாலே போய்விட்டால்... தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது. நேர்மையான விமர்சனங்களை முன்வைப்போம். அதை அவர் எப்படி ஏற்றுக்கொள்வாரோ அப்படி ஏற்றுக்கொள்ளட்டும்” என்று தெரிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெறும் ராணுவக் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னைக்கு வந்தார். அப்போது போலீசாரின் பலத்த பாதுகாப்பையும் மீறி பல்வேறு கட்சியினர் கறுப்புக் கொடியுடன் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

அப்போது இந்தப் போராட்டங்கள் குறித்த செய்திகள் மற்றும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கருத்துகள் அனைத்தும், #GoBackModi என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் பகிரப்பட்டது. இந்த ஹேஷ்டேக் அப்போது இந்திய அளவில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

Next Story