சீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி ஆலோசனை
சீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி ஆலோசனை நடைபெற்று வருகிறது.
சென்னை
சென்னை கிண்டி சோழா ஓட்டலில் இருந்து கோவளத்துக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் புறப்பட்டார். கிண்டி படேல் சாலை, மத்திய கைலாஷ், ராஜீவ்காந்தி சாலை வழியாக சென்று கிழக்குக் கடற்கரை சாலை வழியே கோவளம் பயணம் செய்தார். கோவளத்தில் சீன அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி.
பேட்டரி கார் மூலம், ஓட்டல் வளாகத்தை சுற்றி பார்த்தனர். தொடர்ந்து, கடற்கரை கண்ணாடி அருகே, இருவரும் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேருக்கு நேர் எனக் கூறப்படும் இந்த தனிப்பட்ட சந்திப்பின் போது, எல்லைப் பிரச்னை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் ஆழமான விவாதத்தை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலோசனை பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை மற்றும் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சீன தொழில்துறை தேவைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்கும்.
தொடர்ந்து 11.45 மணிக்கு ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி மதிய உணவளிக்கிறார். பின்னர் 12.45 மணிக்கு கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் ஹோட்டலில் இருந்து, சென்னை விமான நிலையத்துக்கு புறப்படுகிறார்.
அங்கிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு தனது இருநாள் பயணத்தை முடித்துக்கொண்டு சீனா புறப்படுகிறார்.
Related Tags :
Next Story