‘தமிழக மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது’ டுவிட்டரில் நன்றி தெரிவித்த மோடி


‘தமிழக மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது’ டுவிட்டரில் நன்றி தெரிவித்த மோடி
x
தினத்தந்தி 12 Oct 2019 11:45 PM GMT (Updated: 12 Oct 2019 9:18 PM GMT)

‘தமிழக மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

சென்னை,

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திரமோடி-சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடந்து முடிந்துள்ளது. 2 நாட்கள் நடந்த இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருக்கு தமிழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

2 நாள் நிகழ்வு முடிந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங் நேற்று மதியம் நேபாளத்திற்கு புறப்பட்டு சென்றார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடியும் டெல்லி புறப்பட்டு சென்றார். மோடி சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்வதற்கு முன்பு டுவிட்டரில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தமிழில் ‘டுவிட்’ செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மகிழ்ச்சி அளிக்கிறது

முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது இந்தியா-சீனா உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். நமது நாட்டு மக்களுக்கும், உலகத்திற்கும் பலன் அளிக்கும். தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் (தமிழகம்) மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கும் நன்றி. அழகிய மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய-சீன முறை சாரா உச்சி மாநாட்டிற்கு உறுதுணை புரிந்து உபசரிப்பு நல்கிய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக கலாசார அமைப்புகளுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story