சசிகலா ஒருபோதும் அதிமுகவில் இணைய மாட்டார்: டிடிவி தினகரன் உறுதி!


சசிகலா ஒருபோதும் அதிமுகவில் இணைய மாட்டார்: டிடிவி தினகரன் உறுதி!
x
தினத்தந்தி 24 Oct 2019 7:16 AM GMT (Updated: 24 Oct 2019 7:16 AM GMT)

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்ததும் ஒருபோதும் அதிமுகவில் இணைய மாட்டார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

சென்னை,

 தமிழக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மதுரையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலை பெற்று அ.தி.மு.க. மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.

அப்போது, டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், இருவரையும் கட்சியில் சேர்ப்பது குறித்து கட்சியின் பொதுக்குழு முடிவு செய்யும் என கூறினார்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்த  அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது:-

உள்ளாட்சித் தேர்தல் நடக்காது. தேர்தல் நடைபெற்றால் அதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிச்சயம் போட்டியிடும்.

இதுவரை அதிமுக ஆட்சியில் ஒரு நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் ஏரிகளை தூர்வாரும் பணிகள் சரிவர நடைபெறவில்லை. தூர்வாருவதற்காக  ஒதுக்கப்பட்ட நிதிகள் ஆற்றோடு கடலில் கலந்து விட்டன. சினிமா துறையை பழிவாங்கும் நடவடிக்கையில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் அதிமுகவில் ஒருபோதும் சேர மாட்டார் என கூறினார். 

Next Story