உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கண்ணாமூச்சி விளையாடுகின்றன; மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு


உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கண்ணாமூச்சி விளையாடுகின்றன; மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Nov 2019 11:10 PM GMT (Updated: 30 Nov 2019 11:10 PM GMT)

மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்திருக்கவேண்டிய உள்ளாட்சி தேர்தல் இன்றுவரை நடத்தப்படாததால், மக்கள் அடிப்படை வசதிகளில் ஏற்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்ட, கோரிக்கை வைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் ஆளும் கட்சியும் (அ.தி.மு.க.), எதிர்க்கட்சியும் (தி.மு.க.) எந்த கவலையும் இல்லாமல் தங்கள் சுயநலம் வேண்டி உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறார்கள். 3 ஆண்டுகளாக ‘புலி வருது புலி வருது’ என்பது போல் அரசு தேர்தல் நடத்தபோவதாக அறிவிப்பதும், அதில் குறை இருப்பதாக எதிர்க்கட்சி நீதிமன்றத்திற்கு போவதுமாக, ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது.

ஒருபுறம் தேர்தல் நடத்தப்படுவதாக கட்சிக்காரர்களிடம் விருப்பமனு பெறுவதும், மறுபுறம் தேர்தலுக்கு தடை போட மனுவோடு நீதிமன்ற வாசலில் நிற்பதும், இதுவரை மக்களை மட்டுமே ஏமாற்றி வந்த இவர்கள் தங்கள் கட்சிக்காரர்களையும் ஏமாற்ற துணிந்துவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது. 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், தமிழக மக்கள் இவர்களை அடையாளம் கண்டு புறக்கணிப்பதுதான் உள்ளாட்சி தேர்தல் என்கிற ஒன்றை நடப்பதற்கும், உண்மையான மக்களாட்சி உருவாவதற்கும் வழியமைக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story