சென்னையில் வரும் 23-ம் தேதி பேரணி -மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


சென்னையில் வரும் 23-ம் தேதி பேரணி  -மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Dec 2019 8:07 AM GMT (Updated: 18 Dec 2019 8:07 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23-ம் தேதி பேரணி நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, 2014ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை திருத்த சட்டம்  வகை செய்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா மற்றும் மேகாலயாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்து இருந்தது. அதன்படி, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்ட  தலைநகரங்களில் போராட்டம் நடத்தியது. காஞ்சீபுரத்தில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள தி.மு.க. தலைமையகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வரும் 23-ம் தேதி சென்னையில் பேரணி நடத்துவது என திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், 

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் 23-ம் தேதி காலை 10 மணிக்கு பேரணி நடைபெற உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு அகில இந்திய அளவில் எதிர்ப்பு இருக்கிறது. எனவே இதற்குப் பிறகாவது மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.

நாட்டில் அமைதியை குலைக்கும் சட்டமாக இந்த திருத்தச் சட்டம் அமைந்திருக்கிறது. அண்டை நாடுகள் பட்டியலில் இலங்கை விடுபட்டிருப்பது ஏன்? அகதிகளாக வரும் மக்களில் இஸ்லாமியர்களை மட்டும் பிரிப்பது ஏன்?

குடியுரிமை சட்டத்தில் இருந்து இலங்கை தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஏன் விடுவிக்கப்பட்டனர். தமிழின துரோகிகளாக அதிமுகவினர் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். அவர்களை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். 

கூட்டணிக்கட்சியினர் மட்டுமே அழைக்கப்பட்டனர். தேவைப்பட்டால் மற்றவர்கள் பின்னர் அழைக்கப்படுவர். ஆலோசனைக்கூட்டம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தொலைபேசியில் என்னிடம் பேசினார்.

பேரணியில் அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்சிகள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பேரணியில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு  விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story