சசிகலாவை தாக்கும் தர்பார்...! -படத்தை பாராட்டும் அமைச்சர் ஜெயக்குமார்


சசிகலாவை தாக்கும் தர்பார்...! -படத்தை பாராட்டும் அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 9 Jan 2020 9:55 AM GMT (Updated: 9 Jan 2020 9:55 AM GMT)

சசிகலாவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், தர்பார் படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றுள்ளார்.

சென்னை

அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் இன்று பொதுமக்களுக்கு பொங்கல்  பரிசினை வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
 
பொங்கல் பரிசு 4 நாட்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை  வழங்கப்படும். ஒரு கடையில் 300 பேருக்கு தினசரி வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் காலையிலேயே வர வேண்டாம். இரவு 7 மணி வரை வழங்கப்படுவதால் பொறுமையாக வந்து வாங்கி செல்லுங்கள். பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

 “தர்பார் திரைப்படத்தில் சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கின்ற பணத்தினால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கும் மனிதர்களைப் பற்றி  எடுக்கப்பட்டுள்ளது. அதாவது பணம் பாதாளம் வரைக்கும் பாயும் அதேசமயத்தில் பணம் சிறைச்சாலை வரைகூட பாயும் என்று சசிகலா அவர்களை சுட்டிக்காட்டி படம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கு விசாரணையில் உள்ளதால் அதை பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, ஆனால் அதே சமயத்தில் திரைப்படங்கள் வாயிலாக நல்ல கருத்துக்களை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.

மேலும் விஜய் நடித்த பிகில் திரைப்படத்திற்கு ஒரே ஒரு சிறப்புக் காட்சி  மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தர்பார் படத்திற்கு 4 நாட்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்விக்கு எங்களைப் பொருத்தவரை தர்பாரும் ஒன்றுதான் பிகிலும் ஒன்றுதான் என்று கூறினார்.

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் இன்று வெளியாகியுள்ள படம் தர்பார். ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். 7 ஆயிரம் தியேட்டர்களில்  தர்பார் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தின் ஒரு காட்சியில் காவல்துறை அதிகாரி ஒருவர், இப்போதெல்லாம் சிறையிலிருப்பவர்கள் ஷாப்பிங் போகிறார்கள் என்று ரஜினியிடம் பேசுவதாக வசனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Next Story