இடைத்தேர்தலுக்கு முன்னர் ஏன் இந்த ஞானம் வரவில்லை? துரைமுருகனுக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி


இடைத்தேர்தலுக்கு முன்னர் ஏன் இந்த ஞானம் வரவில்லை? துரைமுருகனுக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி
x
தினத்தந்தி 15 Jan 2020 11:00 AM GMT (Updated: 15 Jan 2020 11:00 AM GMT)

இடைத்தேர்தலுக்கு முன்னர் ஏன் இந்த ஞானம் வரவில்லை? என துரைமுருகனுக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இலைமறை காயாக இருந்த இந்த பிரச்சினை, மறைமுகத் தேர்தலின்போது வெளிச்சத்துக்கு வந்தது. தி.மு.க., கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரடியாக குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டார். மறைமுகத் தேர்தலிலும் தி.மு.க.வை விட கூடுதல் இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது.

அதாவது, மறைமுக வாக்கெடுப்பின்போது, தி.மு.க.வை காங்கிரஸ் கைவிட்டது வெளிப்படையாகவே தெரிந்தது. இது தி.மு.க. தலைமையை கோபம் கொள்ளச் செய்தது. குறிப்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். பின்னர், ‘தி.மு.க.வும், காங்கிரசும் எப்போதும் இணைந்த கரங்கள்’ என்று அழகிரி தெரிவித்தார்.

திமுகவின் டி.ஆர்.பாலு கூறுகையில், திமுக குறித்த அறிக்கையை கே.எஸ்.அழகிரி தவிர்த்திருக்கலாம். தலைவர் மீது வைத்த குற்றச்சாட்டாகவே நாங்கள் அதை பார்க்கிறோம். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி பழைய நிலைக்கு திரும்புமா என்பதற்கு காலம் பதில் சொல்லும், என்றார்.

இதனிடையே கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி போனால் போகட்டும். எங்களுக்கு என்ன நஷ்டம் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில்,  காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி., கார்த்திக் சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில்,

வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் ஏன் இந்த ஞானம் வரவில்லை? திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என துரைமுருகன் பேசியதற்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி  எழுப்பி உள்ளார்.

Next Story