7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊதியம் அரசாணை வெளியீடு


7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி   கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊதியம்   அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 23 Jan 2020 8:26 PM GMT (Updated: 23 Jan 2020 8:26 PM GMT)

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி, அரசு சார்ந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக உயர்க்கல்வி துறை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி கவுன்சிலின் பரிந்துரைகளை ஏற்று 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு சார்ந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியம் மாற்றி அமைக்கப்படுகிறது.

நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படும் உதவி பேராசிரியர்களுக்கு ஆரம்ப ஊதியம் ரூ.57,700-ம், பதவி உயர்வு மூலம் மூத்த உதவிப் பேராசிரியராக நியமிக்கப்படுபவர்களுக்கு ரூ.68,900-ம், பதவி உயர்வு மூலம் தேர்வு செய்யப்படும் செலக்‌ஷன் கிரேடு உதவி பேராசிரியர்களுக்கு ரூ.79,800-ம் நிர்ணயிக்கப்படுகிறது.

ஊதியம் நிர்ணயம்

அதேபோல், நேரடி மற்றும் பதவி உயர்வு மூலம் தேர்வாகும் இணை பேராசிரியர்களுக்கு ரூ.1,31,400-ம், நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலம் தேர்வாகும் பேராசிரியர்களுக்கு ரூ.1,44,200-ம், பதவி உயர்வு பெறும் மூத்த பேராசிரியர்களுக்கு ரூ.1,82,200-ம், பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் மூலம் தேர்வாகும் முதல்வர் மற்றும் இயக்குனர்களுக்கு ரூ.1,44,200-ம் ஆரம்ப ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றுபவர்களுக்கான ஓய்வு பெறும் வயதில் எந்த மாற்றமும் இல்லை. மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், விபத்துக் காப்பீடு, விடுப்பு உள்ளிட்ட அனைத்தும் மாநில அரசின் விதிகளின் படியே அமல்படுத்தப்படும்.

பணி நேரம்

உதவி பேராசிரியர்கள் வாரத்துக்கு 16 மணி நேரமும், இணை பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் வாரத்துக்கு 14 மணி நேரமும், முதல்வர் மற்றும் இயக்குனர்கள் வாரத்துக்கு 6 மணி நேரமும் பணியாற்ற வேண்டும். பணிக்காலத்தில் பேராசிரியர்கள் ஆராய்ச்சி படிப்பை படித்து முடித்தால் அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும். அதேநேரத்தில் வேறு தொழில்நுட்ப படிப்புகளை பகுதி நேரமாக படித்தால் எந்த ஒரு ஊக்க ஊதியமும் வழங்கப்படாது.

நேரடித் தேர்வு மூலமாகவோ அல்லது பதவி உயர்வு மூலமாகவோ பேராசிரியர்கள் அல்லது பணியாளர்களைத் தேர்வு செய்யும் போது ஏ.ஐ.சி.டி.இ. மற்றும் யு.ஜி.சி. விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story