2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை - மு.க.ஸ்டாலின் பேச்சு


2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை - மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 30 Jan 2020 11:30 PM GMT (Updated: 30 Jan 2020 7:36 PM GMT)

சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என்றும், 2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை என்றும் தஞ்சாவூரில் நடந்த திருமண விழா ஒன்றில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் முன்னாள் மத்திய இணை மந்திரியும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி மாணிக்கம் இல்லத் திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

இங்கு திவாகரன் பேசியதைக் கேட்டு நீங்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியைத் தெரிவித்தீர்கள். நேரு பேசும்போது சொன்னார்; இப்படித்தான் புதுக்கோட்டையில் பா.ஜ.க.வின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த அரசகுமார் பேசினார். பேசிவிட்டு ஒரு வாரத்தில் தி.மு.க.வில் வந்து சேர்ந்துவிட்டார். இன்று திவாகரன் பேசி உள்ளார். அவர் எங்கே போகிறார். எங்கே வருகிறார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அது அவர் எடுக்க வேண்டிய முடிவு. ஆனால், அவர் பேசும் போது, கட்சி பாகுபாடின்றி, அ.தி.மு.க., தி.மு.க. என்று பாராமல் தமிழ்நாட்டைக் காப்பாற்ற தமிழன் என்ற உணர்வைப் பெற்றாக வேண்டும் என்று குறிப்பிட்டார். அதைத்தான் நான் இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

உள்ளாட்சித் தேர்தலில் நாம் சற்றே அலட்சியமாக இருந்து விட்டதாகக்கூட திவாகரன் குறிப்பிட்டுச் சொன்னார். அதனால் ஆங்காங்கே சில தவறுகள், முறைகேடுகள் நடந்து தி.மு.க.வின் வெற்றி தடுக்கப்பட்டதாக அவர் கூறினார். ஆனால், அலட்சியமாக இல்லாமல் கவனமாக இருந்ததால் தான் இந்த அளவுக்கேனும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதைத் திவாகரனுக்கு நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இல்லையென்றால் இன்னும் மோசமாக போய் இருக்கும். அதுதான் உண்மை. விழிப்போடு நம்முடைய தோழர்கள் இருந்த காரணத்தால்தான், சில இடங்களில் அட்டூழியங்களைத் தடுத்து 65 சதவீதம் பெற்றியைப் பெற்றுள்ளோம். முறையாக நடந்திருந்தால், எண்ணி முடித்ததை முறையாக அறிவித்திருந்தால் கூட, 85 சதவீதம், 90 சதவீதம் நாம்தான் வெற்றி பெற்றிருப்போம்.

2 நாட்களுக்கு முன்னர் என் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 வழக்குகள் என்ன, 2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும், அதைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம். தி.மு.க. பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம். மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள். என் மீது வழக்கு போடும் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவ படிப்புக் கனவை, நிறைவேற விடாமல் தடுக்கும் ‘நீட்’ தேர்வைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் இந்த ஆட்சிக்கு இருக்கிறதா?.

தஞ்சை டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் பல கொடுமைகளைச் சந்தித்து வருகிறார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 2 நாட்களுக்கு முன்னர் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என்று சட்டமன்றத்தில் சொன்னார்கள். ஆனால் தற்போது என்ன நிலை? சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் அனுமதி கேட்கவேண்டிய அவசியம் இல்லை என பட்டவர்த்தனமாக மத்திய மந்திரி பேசுகிறார். அதை இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதை டெல்டா பகுதியைச் சேர்ந்த மக்கள் நன்கு உணர்ந்து பார்த்து, உங்களுக்காக உழைக்கும், உங்களுக்காக பாடுபடும் தி.மு.க.வுக்கு என்றும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story