ரூ. 300 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் -வருமானவரித்துறை


ரூ. 300 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம்   -வருமானவரித்துறை
x
தினத்தந்தி 6 Feb 2020 12:27 PM GMT (Updated: 6 Feb 2020 12:27 PM GMT)

கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ரூ. 300 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என வருமானவரித்துறை தெரிவித்து உள்ளது.

சென்னை

 பிகில் திரைப்படம் ரூ. 300 கோடி வசூல் ஈட்டியதன் அடிப்படையில் கடந்த 2 நாட்களாக வருமான வரிசோதனைகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. 

பிகில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும், பிரபல திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும்  அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியனின் நண்பர் சரவணன் வீட்டிலும்  வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நடிகர் விஜய்க்கு சொந்தமான சாலிக்கிராமம் வீடு, பனையூரில் உள்ள பண்ணை வீடு ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர்.  நடிகர் விஜய் வீட்டில் இதுவரை 10 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறை  சோதனை நடைபெற்று வரும் நடிகர் விஜய்யின் வீட்டிற்கு மேலும் 2 அதிகாரிகள் வருகை தந்து உள்ளனர்.

இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.  சினிமா தயாரிப்பாளர், பைனான்சியர், அவரது நண்பர், நடிகர் வீடு என மொத்தம் 38 இடங்களில் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது. 

சினிமா பைனான்சியருக்கு சொந்தமான சென்னை, மதுரையில் உள்ள இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.300 கோடி மறைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.  அதில் பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரை வீடுகளில் இருந்து கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு ரூ.300 கோடிவரை வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story