குரூப்-4, குரூப்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: ஆதார் கட்டாயம் ஆகிறது; தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்


குரூப்-4, குரூப்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: ஆதார் கட்டாயம் ஆகிறது; தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்
x
தினத்தந்தி 8 Feb 2020 12:15 AM GMT (Updated: 8 Feb 2020 12:05 AM GMT)

குரூப்-4, குரூப்-2 தேர்வுகளில் முறைகேடு அம்பலமானதை தொடர்ந்து தேர்வு முறையில் அதிரடி மாற்றங்களை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது.

சென்னை, 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குரூப்-4, குரூப்-2 உள்ளிட்ட சில தேர்வுகளில் முறைகேடுகள் நடந்தது வெட்ட வெளிச்சம் ஆனது.

இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளை போலீசார் ஒவ்வொரு நாளும் தேடிப்பிடித்து கைது செய்கின்றனர்.

இந்த நிலையில் டி.என். பி.எஸ்.சி. நடத்தக் கூடிய தேர்வுகளில் வெளிப் படைத்தன்மையை மேலும் அதிகரிக்கும் வகையில் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்து இருக்கிறது.

அதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் க.நந்தகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

டி.என்.பி.எஸ்.சி. தேர்வர் கள் நலனை கருத்தில் கொண்டு வாய்ப்புள்ள இனங்களில் தவறுகளை களைய தேர்வு முறைகளில் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வந்துள்ளது. இருப்பினும் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட சில தேர்வுகளில் விரும்பத்தகாத சில முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன.

தேர்வாணையம் தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளிலும் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற உறுதி பூண்டு இருக்கிறது. மேலும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வண்ணமாக பல்வேறு முடிவுகளை தேர்வாணையம் எடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பல ஆக்கப்பூர்வமான சீர் திருத்த நடவடிக்கைகளை எடுக்கவும் ஆவன செய்து வருகிறது. வெளிப்படைத்தன்மை அதிகரிக்க பின்பற்றப்பட உள்ள முடிவுகள் வருமாறு:-

* தேர்வு நடைமுறைகள் முழுவதும் நிறைவடைந்த உடன் இறுதியாக தேர்வு பெற்றவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இதன் தொடக்கமாக 2019-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்வின் நடைமுறைகள் முற்றிலுமாக நிறைவடைந்த நிலையில் தேர்ச்சி பெற்ற 181 பேரின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

* தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் நிறைவு பெற்றபின், தேர்வர்களின் விடைத்தாள் நகல்களை (ஓ.எம்.ஆர். மற்றும் எழுத்துத் தேர்வு விடைத்தாள்கள்) இணையதளம் மூலமாக உரிய கட்டணம் செலுத்தி உடனடியாக பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும். இந்த முறை வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

* பல்வேறு பதவிகள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இவ்வாறு கலந்தாய்வு நடைபெறும் நாட்களில் அந்தந்த நாளின் இறுதியில் துறை, மாவட்டம், இடஒதுக்கீடு வாரியாக நிரப்பப்பட்ட இடங் கள் மற்றும் காலியிடங்களின் விவரம் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இதுவும் வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

* தேர்வாணையம் தேர்வர்களின் நலன்கருதியே அவர்தம் விருப்பப்படி தேர்வு மையத்தின் இணையவழி விண்ணப்பத்தின்போது தேர்வு செய்யும் நடைமுறையினை பின்பற்றி வருகிறது. இனி தேர்வர்கள் இணைய வழியே விண்ணப்பிக்கும்போது 3 மாவட்டங்களை தங்களுடைய தேர்வு மைய விருப்பமாக தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு எழுதும் மையங்களை தேர்வர்களுக்கு அதிக சிரமம் ஏற்படாத வகையில் தேர்வாணையமே ஒதுக்கீடு செய்யும்.

* தேர்வு நடவடிக்கைகளை மேலும் செம்மைப்படுத்தவும், ஒரேநபர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதை தடுக்கவும் விண்ணப்பிக்கும் போது தேர்வர் கள் ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்படும். தேர்வு எழுதவரும் தேர்வர்களின் விரல் ரேகையை ஆதார் தகவலோடு ஒப்பிட்டு மெய்த்தன்மையை சரிபார்த்த பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப் படுவார்கள்.

* இனிவரும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாகவே முறைகேடுகள் ஏதேனும் இருப்பின் அதனை முன்கூட்டியே அறிந்து முழுவதும் தடுக்கும் வண்ணமாக உயர் தொழில்நுட்ப தீர்வு வரவிருக்கும் தேர்வுகளில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும். இதுதவிர தேர்வு நடைமுறை சார்ந்த பிற செயல்பாடுகளிலும் விரைவில் தக்க மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story