காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு; விஜயகாந்த் வரவேற்பு


காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு; விஜயகாந்த் வரவேற்பு
x
தினத்தந்தி 10 Feb 2020 6:37 AM GMT (Updated: 10 Feb 2020 6:37 AM GMT)

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

சென்னை,

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.  சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ.1,022 கோடி மதிப்பில் சுமார் 1,100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படுகிறது.  இந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, விவசாய பெருவிழா ஆகியவை நேற்று தலைவாசலில் நடைபெற்றது.

விழாவுக்கு துணை முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு விவசாய பெருவிழாவின் கண்காட்சியை தொடங்கிவைத்தார். இதையடுத்து ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதல் செங்கலை எடுத்து வைத்தார். அடுத்ததாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர்களும் செங்கலை எடுத்து வைத்தனர்.

பின்னர் கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கான கல்வெட்டை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதன்பின்பு விழாவில் பேசிய முதல் அமைச்சர் பழனிசாமி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்திடவும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகள் “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக” மாற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுகின்றேன். டெல்டா மாவட்டங்களை பாதுகாப்பதற்காக எங்களுடைய அரசு காவிரி டெல்டா பகுதிகளை “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக” மாற்றப்படும் என்ற அறிவிப்பை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசினார்.

இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வரவேற்றனர்.  பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர்.  அரசின் இந்த அறிவிப்புக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தமிழக முதல்வர் திரு.எடப்பாடி.பழனிச்சாமி அவர்கள், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க தனி சட்டம் இயற்றப்படும், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் வராது என்று அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இது அப்பகுதி விவசாயிகளுக்கு மிகு‌ந்த மகிழ்ச்சியளிக்கும் என தெரிவித்துள்ளார்.

Next Story