நடிகர் விஜய் வீட்டில் சோதனை: வருமானவரித்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - சென்னையில் அதிகாரிகள் ஆலோசனை


நடிகர் விஜய் வீட்டில் சோதனை: வருமானவரித்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - சென்னையில் அதிகாரிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 13 Feb 2020 11:45 PM GMT (Updated: 13 Feb 2020 11:16 PM GMT)

நடிகர் விஜய் உள்ளிட்டோர் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சென்னையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

சென்னை, 

நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் மதுரை அன்பு என்ற அன்புசெழியன், பிகில் பட தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி கணக்கில் காட்டப்படாத ரொக்கம், நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இதனையடுத்து சென்னை, நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியனின் ஆடிட்டர்கள் மற்றும் கல்பாத்தி எஸ்.அகோரத்தின் மகள் அர்ச்சனா ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அவர்களிடம் பெறப்பட்ட விளக்கங்களை வருமானவரி அதிகாரிகள் அறிக்கையாக தயாரித்து, டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் வருமானவரி உயர் அதிகாரிகள் சென்னையில் நடத்திய கூட்டத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து உள்ளனர்.

இதுகுறித்து வருமானவரி உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் சொத்து மதிப்பு, அதன்மூலம் கிடைக்கும் வருவாய் உள்ளிட்ட தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து அடுத்த கட்டமாக பினாமி பெயரில் எங்கெல்லாம் அசையா சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன?, வேறு எந்த துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது? ஆகியவற்றை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளோம். இதுதவிர பல முக்கிய தகவல்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. அதன்படி உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருவர் சட்டவிரோதமான முறையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வரி ஏய்ப்பு செய்தால் அது குறித்து வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். நாட்டின் நலன் கருதி ரகசிய கடிதம் மூலம் இந்த தகவலை தெரியப்படுத்தலாம். தகவல் தெரிவிப்பவரின் பெயர், விவரம் தேவையில்லை. ஆனால் அவர் அளிக்கும் தகவல் உண்மையானதாக இருக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story