சென்னையில் 2-வது விமான நிலையமாக அமைய உள்ள பரந்தூர், சர்வதேச விமான நிலையமாகிறது


சென்னையில் 2-வது விமான நிலையமாக அமைய உள்ள பரந்தூர், சர்வதேச விமான நிலையமாகிறது
x
தினத்தந்தி 16 Feb 2020 10:45 PM GMT (Updated: 16 Feb 2020 8:05 PM GMT)

சென்னையில் 2-வது விமான நிலையமாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அமைகிறது. இங்கு இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதையடுத்து பரந்தூர் விமான நிலையத்தை மெட்ரோ ரெயில், இலகு ரெயில் போக்குவரத்து மூலமாக இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை, 

சென்னை மீனம்பாக்கத்தில் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான சேவைகளை பயன்படுத்தி வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதையடுத்து மீனம்பாக்கத்தில் இருந்து 62 கி.மீ. தொலைவில் உள்ள காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் 2-வது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இந்த இடம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் மிகவும் அருகாமையில் உள்ளதால் விமான நிலையம் கட்டுவதற்காக முக்கிய இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. பரந்தூரில் விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர், அங்கிருந்து சர்வதேச விமானங்களை இயக்குவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுதவிர விமானம் சார்ந்த வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையிலான அலகுகள், பயிற்சி மையங்களும் அங்கு அமைக்கப்பட உள்ளன.

பரந்தூர் விமான நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையிலான போக்குவரத்து திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, விமான நிலையம் முதல் பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரெயில் வழித்தடம் தொடக்கத்தில் திருமழிசை வரையிலும், அதன் பின்னர் பரந்தூர் வரையிலும் நீட்டிப்பு செய்யப்பட உள்ளது. உத்தேசிக்கப்பட்ட இந்த வழித்தடம் சென்டிரல்-கோயம்பேடு-ஆலந்தூர் மெட்ரோ ரெயில் வழித்தடத்தை கோயம்பேட்டில் இணைக்கும். இது நகர்ப்புறத்தில் இருந்து விமான நிலையம் செல்ல உள்ள பயணிகளுக்கு தீர்வாக அமையும்.

இதேபோல மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பரந்தூர் விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகளுக்காக டிராம் வண்டிகள் போன்று இருக்கும் இலகு ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது 2 முதல் 4 பெட்டிகளை கொண்டது. இந்த இலகு ரெயில் பெட்டிகள், மெட்ரோ ரெயில் பெட்டிகளை விடவும் சிறியதாக இருக்கும். இதற்காக ரூ.100 கோடி மட்டுமே செலவு ஆகும். ஆனால் உயர் மட்ட பாதையில் மீனம்பாக்கத்தில் இருந்து பரந்தூர் வரை மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைத்தால் ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரை செலவாகும்.

இதனால் இலகு ரெயில்களை இயக்குவதே சரியான தீர்வாக இருக்கும் என்று தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் எந்த போக்குவரத்து திட்டம் சாத்தியமானது என்பது குறித்து சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்காக விரைவில் ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பரந்தூரில் அமைய உள்ள 2-வது விமான நிலையத்துக்கு பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி செல்லும் வகையில் மெட்ரோ ரெயில், இலகு ரெயில் மூலமாக இணைப்பதற்கான திட்டம் விரைவில் இறுதி வடிவம் பெறும் என்று கூறப்படுகிறது.

Next Story