அவிநாசியில் கேரள பேருந்து விபத்து ; 20 பேர் பலி- கேரள அமைச்சர்கள் தமிழகம் விரைவு


அவிநாசியில் கேரள பேருந்து விபத்து ; 20 பேர் பலி- கேரள அமைச்சர்கள் தமிழகம் விரைவு
x
தினத்தந்தி 20 Feb 2020 4:27 AM GMT (Updated: 20 Feb 2020 5:07 AM GMT)

கேரள பேருந்து விபத்துக்குள்ளானதையடுத்து, சம்பவ இடத்திற்கு கேரள அமைச்சர்கள் விரைந்துள்ளனர்.

திருவனந்தபுரம், 

பெங்களூருவில் இருந்து  திருவனந்தபுரம் நோக்கி கேரள அரசுக்கு சொந்தமான சொகுசு பேருந்து 48 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, டைல்ஸ் ஏற்றிக்கொண்டு வந்த கண்டெய்னர் லாரியுடன் மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் உயிரிழந்தனர்.  விபத்தில் பலியானவர்களின் உடலை அடையாளம் காணும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில்,  விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளிக்க பாலக்காடு மாவட்ட ஆட்சியரை நிகழ்விடத்திற்கு செல்லுமாறு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.  தமிழக அரசுடன் இணைந்து சாத்தியமான அனைத்து நிவாரண நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று கேரள முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

கேரள போக்குவரத்து துறையின் மூத்த அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து இருப்பதாகவும், விபத்து குறித்து கேரள போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர், விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிப்பார் எனவும் கேரள போக்குவரத்து துறை மந்திரி ஏகே சசீந்திரன் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறை  அமைச்சர் ஏகே சசீந்திரன் மற்றும் அமைச்சர் விஎஸ் சுனில் குமார், விபத்து நடந்த திருப்பூர் சென்று அனைத்து உதவிகளை செய்யுமாறு கேரள முதல்வர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, இரு அமைச்சர்களும் தமிழகம் விரைந்துள்ளனர். 

Next Story