கனிமொழி எம்.பி.யும் ரூ.1 கோடி ஒதுக்கினார்: கொரோனா நிவாரண பணிகளுக்கு தி.மு.க. ரூ.1 கோடி நிதி உதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


கனிமொழி எம்.பி.யும் ரூ.1 கோடி ஒதுக்கினார்: கொரோனா நிவாரண பணிகளுக்கு தி.மு.க. ரூ.1 கோடி நிதி உதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 30 March 2020 9:30 PM GMT (Updated: 30 March 2020 9:11 PM GMT)

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தி.மு.க. ரூ.1 கோடி உதவி அளிப்பதாக மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதைப்போல கனிமொழி எம்.பி.யும் ரூ.1 கோடி ஒதுக்கி உள்ளார்.

சென்னை, 

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்த பணிகளுக்கு நிதி உதவி அளிக்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை ஏற்று, அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என நிதி உதவி அளித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிதி உதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக தி.மு.க. அறக்கட்டளை சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதி அளிக்கப்படுகிறது. இந்த நிதி ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

இதைப்போல தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழியும் நிதி உதவி அளித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு, அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள், மருத்துவர்கள்-சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான தற்காப்புக் கருவிகள் வாங்குதல், கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி ஒதுக்குகிறேன்.

மேற்கண்ட பணிகளுக்கு அந்த நிதியை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கனிமொழி எம்.பி. கூறியிருந்தார்.

Next Story