கல்லூரி, பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடக்கும்? - 13-ந் தேதிக்கு பிறகு முடிவு தெரியும்


கல்லூரி, பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடக்கும்? - 13-ந் தேதிக்கு பிறகு முடிவு தெரியும்
x
தினத்தந்தி 9 April 2020 10:00 PM GMT (Updated: 9 April 2020 8:31 PM GMT)

கல்லூரி, பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடக்கும்? என்பது குறித்து 13-ந் தேதிக்கு பிறகு தெரியவரும் என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்து இருக்கிறது.

சென்னை, 

நாடு முழுவதும் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கல்லூரிகள் அனைத்தும் வருகிற 14-ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கின்றன. இந்த காலகட்டங்களில் மாணவர்களின் கற்றல், கற்பித்தலில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்கலைக்கழக மானியக்குழு ஆன்-லைனில் பாடம் நடத்துவது குறித்த ஆலோசனையை வழங்கியது.

அதன்படி, சென்னை பல்கலைக்கழகம் அதன் கீழ் செயல்படும் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சமீபத்தில் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறனை ஆன்-லைன் மூலம் நடத்தி முடிக்கவும், செமஸ்டர் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையிலும் பாடம் எடுக்கவும் பேராசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. அதிலும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகளை மே மாதம் 15-ந் தேதி வரை மூடப்பட்டு இருக்க வேண்டும் என்று பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடக்கும்? 2020-21-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும்? என்பது தொடர்பாக மாணவ- மாணவிகள் பெரும் எதிர்பார்ப்பில் காத்து இருக்கின்றனர்.

இத்தகைய சூழலில், இதுதொடர்பாக ஆலோசித்து முடிவு எடுப்பதற்காக பல்கலைக்கழக மானியக்குழு உரிய முடிவு எடுப்பதற்காக நிபுணர் குழுவை அமைத்து இருக்கிறது.

இந்த குழுவுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஆர்.சி.குகட் தலைமை தாங்கி இருக்கிறார். மேலும் இந்த குழுவில் சில உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த குழு ஆலோசித்து, பருவத் தேர்வு மற்றும் 2020-21-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் குறித்தும் சில முடிவுகளை எடுத்து அதனை ஒரு அறிக்கையாக 13-ந் தேதி சமர்ப்பிக்க இருக்கிறது. அதனை அடிப்படையாக வைத்து பல்கலைக்கழக மானியக்குழு 13-ந் தேதிக்கு பிறகு சில முக்கிய முடிவுகளையும், அறிவிப்புகளையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story