தமிழகத்தில் முதலீடு செய்ய நேரடி அழைப்பு உலகின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் கடிதம்


தமிழகத்தில் முதலீடு செய்ய நேரடி அழைப்பு உலகின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் கடிதம்
x
தினத்தந்தி 14 Jun 2020 12:31 AM GMT (Updated: 14 Jun 2020 12:31 AM GMT)

தமிழகத்தில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்து உலகின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதலீடுகளை எளிதாக ஈர்ப்பதற்காக, நாடுகளுக்கான சிறப்பு அமைவுகளை உருவாக்குதல், வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழு அமைத்தல் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இடம் பெயர முடிவு

கொரோனா வைரஸ் பரவல் உலக பொருளாதார சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன.

சமீபத்தில் ரூ.15 ஆயிரத்து 128 கோடி முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன. இது இந்த பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டை கருதுவதை எடுத்துக்காட்டுகிறது.

முன்னணி நிறுவனங்கள்

உலகமெங்கும் உள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது, ‘கேட் ஸ்பேட்’ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் லிஸ்ப்ரேஸர், ‘பாசில்’ குழுமத்தின் தலைவர் கோஸ்டா கார்ட்கோடிஸ், ‘நைக்’ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் ஜான் டான்ஹூ,

‘அடிடாஸ் ஏஜி’ நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் காஸ்பர் ரோர்ஸ்டட், ‘மேட்டல் இங்க்’ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் யோனன் கிரைஸ் ஆகிய 5 முன்னணி நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்து முதல்- அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

ஊக்கச் சலுகைகள்

அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story