திருச்செந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் மரணம்


திருச்செந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் மரணம்
x
தினத்தந்தி 25 Jun 2020 9:09 PM GMT (Updated: 25 Jun 2020 9:09 PM GMT)

திருச்செந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். திருச்செந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.

திருச்செந்தூர், 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழியைச் சேர்ந்தவர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் (வயது 73). முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலையில் உயிரிழந்தார். இவருக்கு விஜய அன்புபாய் ஆதித்தன் என்ற மனைவியும், எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், எஸ்.ஆர்.எஸ்.தனஞ்செய ஆதித்தன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவராக உள்ளார்.

கடந்த 1984-ம் ஆண்டு முதல் 1989 வரை திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்காராகவும், நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவராகவும் இருந்தவர். மேலும் திருச்செந்தூர் நிலவள வங்கியின் தலைவராகவும், திருச்செந்தூர் நகர கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் திறம்பட பணியாற்றினார்.

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மீது பற்று கொண்ட எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், தூத்துக்குடி மாவட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவராகவும், மாநில நிர்வாகக்குழு உறுப்பினராகவும் இருந்தார். மேலும் காயாமொழி சி.பா.ஆதித்தனார் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவராகவும் பணியாற்றினார். எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தனின் உடல் அடக்கம், அவரது சொந்த ஊரான காயாமொழியில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 3 மணிக்கு நடக்கிறது.

Next Story