கோவை மாவட்டத்தில் 36 மணிநேரம் முழு ஊரடங்கு - அமலுக்கு வந்தது


கோவை மாவட்டத்தில் 36 மணிநேரம் முழு ஊரடங்கு -  அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 25 July 2020 12:14 PM GMT (Updated: 25 July 2020 12:14 PM GMT)

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 36 மணி நேரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று மாலை முதல் அமலுக்கு வந்தது.

கோவை,

கொரோனா நோய் தொற்றினை தடுக்கவும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இந்த மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த 5, 12 மற்றும் 19-ந் தேதிகளில் எந்தவிதமான தளர்வுகள் இன்றி ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் இன்று (சனிக் கிழமை) மாலை 5 மணி முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை 36 மணி நேரம் எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அப்போது மருத்துவ சேவைகள், பால் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும். வேறு எதுவும் அனுமதிக்கப்பட மாட்டாது. ஊரடங்கை மீறும் வகையில் தேவையின்றி வெளியில் நடமாடுவோர் மீது போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உழவர் சந்தைகள், மார்க்கெட், மளிகைக்கடைகள், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட், இறைச்சிக்கடைகள், டாஸ்மாக் கடைகள், வர்த்தக தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட எந்த கடைகளும் இயங்காது. இதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது


Next Story