தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது
x
தினத்தந்தி 9 Aug 2020 10:52 PM GMT (Updated: 9 Aug 2020 10:52 PM GMT)

தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையைவிட கோவை மற்றும் விருதுநகரில் அதிகம் பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 68 ஆயிரத்து 179 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,503 ஆண்கள், 2,489 பெண்கள், 3-ம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 5,994 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த 7 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 13 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 286 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 765 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 989 பேரும், செங்கல்பட்டில் 397 பேரும், காஞ்சீபுரத்தில் 393 பேரும், குறைந்தபட்சமாக தர்மபுரியில் 29 பேரும், நீலகிரியில் 10 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 31 லட்சத்து 9 ஆயிரத்து 708 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 901 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்த பட்டியலில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 247 ஆண்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 625 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 14 ஆயிரத்து 605 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 37 ஆயிரத்து 362 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 85 பேரும், தனியார் மருத்துவமனையில் 34 பேரும் என 119 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் விருதுநகரை சேர்ந்த 11 வயது சிறுவன் உடல் நலக்குறைவால் கடந்த 24-ந்தேதி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அங்கு பரிசோதனையில் சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். நேற்று உயிரிழந்தவர்களில், விருதுநகர், கோவையில் தலா 13 பேரும், சென்னையில் 12 பேரும், மதுரை, தூத்துக்குடி, திருவள்ளூரில் தலா 6 பேரும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூரில் தலா 5 பேரும், திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, சிவகங்கையில் தலா 4 பேரும், திருப்பத்தூர், தேனி, தஞ்சாவூரில் தலா 3 பேரும், கடலூர், நாமக்கல், ராமநாதபுரம், திருப்பூர், திருச்சியில் தலா இருவரும், தென்காசி, ஈரோடு, தர்மபுரி, அரியலூரில் தலா ஒருவரும் என 27 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 4,921 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 20 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,061 பேரும், மதுரையில் 463 பேரும், காஞ்சீபுரத்தில் 431 பேரும் அடங்குவர். இதுவரையில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 638 பேர் குணம் அடைந்துள்ளனர். சிகிச்சையில் 53 ஆயிரத்து 336 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 860 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 690 பேரும், ரெயில் மூலம் வந்த 426 பேரும், சாலை மார்க்கமாக வந்த 3 ஆயிரத்து 769 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேரும் என மொத்தம் 5 ஆயிரத்து 779 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது ‘ராப்பிட் பரிசோதனை’ செய்யப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





Next Story