தமிழகம் முழுவதும் 3,501 நகரும் ரேஷன் கடைகள் - விரைவில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்


தமிழகம் முழுவதும் 3,501 நகரும் ரேஷன் கடைகள் - விரைவில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 13 Aug 2020 11:30 PM GMT (Updated: 13 Aug 2020 8:21 PM GMT)

தமிழகம் முழுவதும் 3,501 நகரும் ரேஷன் கடைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடங்கிவைக்கிறார்.

சென்னை, 

மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் வந்து பொருட்கள் வினியோகம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் 3,501 நகரும் ரேஷன் கடைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடங்கிவைக்கிறார்.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக சட்டசபையில் 110-ம் விதியின் கீழ் முதல்-அமைச்சர் கடந்த மார்ச் 30-ந்தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே ரூ.9.66 கோடி செலவில் 3,501 அம்மா நகரும் ரேஷன் கடைகள் தொடங்கி செயல்படுத்தப்படும் என்று கூறினார். அதற்கான அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

நகரும் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம், நாள், இடம் ஆகியவற்றுக்கு மாவட்ட கலெக்டர்களின் அனுமதியை பெற வேண்டும். கலெக்டர் நிர்ணயிக்கும் இடங்களில் அவை இயங்கும். நகரும் ரேஷன் கடைகள் செயல்பட வேண்டிய நாள், அரசு விடுமுறையாக இருந்தால், அடுத்த வேலை நாளில் அவை செயல்பட வேண்டும்.

பொருள் வினியோகம் செய்யும் இடம், அரசு கட்டிடம், உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டிடம் அல்லது பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாக இருக்கலாம். இதுபற்றி மக்களிடம் நன்றாக விளம்பரம் செய்ய வேண்டும்.

நகரும் ரேஷன் கடை இயங்கும் இடத்தில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டு, அதில், அனைவரும் அறியும் வகையில் பொருட்கள் வழங்கும் நாள், அட்டைதாரர் வசிக்கும் பகுதி, கடை செயல்படும் நேரம் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும். அந்த நாளில் பொருள் வாங்காத ரேஷன் அட்டைதாரர், பின்னர் தாய்க்கடையில் பொருட்களை பெற அனுமதிக்க வேண்டும்.

நகரும் ரேஷன் கடைகளை செயல்படுத்த மூடக்கூடிய வாகனங்களை வாடகைக்கு அமர்த்தலாம். இதற்கான வாடகை, பொருள் ஏற்றி, இறக்கும் சுமை கூலி ஆகியவற்றை ஆண்டுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்ய கலெக்டர் மற்றும் 4 அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

வாகனத்தில் எடைத்தராசு, பி.ஓ.எஸ். எந்திரம் இருக்க வேண்டும். அவற்றில் கொண்டு செல்லப்படும் கட்டுப்பாட்டு பொருட்கள், சிறப்பு பொதுவினியோக திட்டப் பொருட்களுக்கு தகுந்த இடப்பெயர்வு காப்பீடு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அந்த வாகனத்தில், நகரும் ரேஷன் கடை என்ற பதாகை கட்டப்பட வேண்டும்.

நகரும் ரேஷன் கடைகளில் மாற்றுத்திறனாளிகளை அமர்த்தாமல் அவர்களை ரேஷன் கடைகளில் இடமாற்றம் செய்ய வேண்டும். அனைத்து பொருட்களையும் ஒரே நாளில் ஒரே தவணையில் அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும். பொருட்களின் தரத்தை கள அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். அதற்கு ஏதுவாக அனைத்தையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். ஒவ்வொரு மண்டலத்திலும் எத்தனை நகரும் ரேஷன் கடைகள் அமைக்கப்பட உள்ளன என்பதும் இறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மண்டலத்தில் 401 கடைகள், காஞ்சீபுரம் மண்டலத்தில் 107, திருவள்ளூரில் 118 கடைகள் தொடங்கப்பட உள்ளன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 3,501 கடைகள் தொடங்கப்பட்டு, அதன் மூலம் 5 லட்சத்து 36 ஆயிரத்து 437 பேர் பயனடைவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story