தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு; சென்னையில் 11-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது


தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு; சென்னையில் 11-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது
x
தினத்தந்தி 30 Aug 2020 12:00 AM GMT (Updated: 29 Aug 2020 9:04 PM GMT)

தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

சென்னை,

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், கடந்த ஜூலை மாதம் முதல் ஊரடங்கில் படிப்படியாக சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. இதனால் நாடு முழுவதும் சில தொழில் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் செயல்படத்தொடங்கின.

ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்ட பிறகு கொரோனாவின் தாக்கம் சில இடங்களில் அதிகரித்து காணப்பட்டது. தமிழகத்திலும் அதுபோல் கொரோனா தொற்று நாளுக்கு, நாள் உயர்ந்து வந்தது. இதையடுத்து கடந்த ஜூலை மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்தது.

அதன்படி, ஜூலை மாதத்தில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடைப்பிடிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக ஆகஸ்டு மாதத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு தெரிவித்தது. அதன்படி, முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் 11-வது முறையாகவும், பிற மாவட்டங்களில் 9-வது முறையாகவும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளை தவிர, பிற தேவைகளுக்காக வெளியே வருபவர்களை கண்காணிக்க தமிழகம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர்.

இதுவரை ஊரடங்கில் அரசு விதித்திருந்த விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக9 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்கும், சுமார் 6 லட்சத்து 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே அவசிய தேவைகளின்றி இன்று வெளியில் வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதோடு, அவர்களுடைய வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்து இருக்கின்றனர்.

Next Story