5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது


5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது
x
தினத்தந்தி 7 Sep 2020 1:42 AM GMT (Updated: 7 Sep 2020 1:42 AM GMT)

சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் துவங்கின

சென்னை,

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மெட்ரோ ரெயில் சேவை நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. சென்னையிலும் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு இன்று காலை 7 மணிக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. அரசு குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

விமான நிலையம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை ரெயில் நிலையம் வரை பயணிகளுடன் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் மற்றும் மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இன்று காலை 7 மணிக்கு மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டனர்.  

பயணிகளுக்கான கட்டுப்பாடுகள்

மெட்ரோ ரெயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் முககவசம் அணிந்து வரும் பயணிகள், கிருமிநாசினி தெளிக்கும் கருவி மூலம் கைகளை சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும். தொடர்ந்து உடல் வெப்பநிலை பரிசோதனையை முடிக்கவேண்டும். இதில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் உடல் வெப்பம் இருக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து சமூக இடைவெளியுடன் டிக்கெட் கவுண்ட்டருக்கு செல்லும் பயணிகளுக்கு நேரடி தொடர்புகளை தவிர்க்கும் வகையில் பணமில்லா பரிவர்த்தனையாக தொடுதல் இல்லா பயணச்சீட்டுகளை வாங்க ஊக்குவிக்கப்படுவார்கள்.

குறிப்பாக பயண அட்டைகள் (‘ஸ்மார்ட் கார்டு’) பெறுதல் மற்றும் ரீசார்ஜ் செய்வது மற்றும் செல்போன் உதவியுடன் மெட்ரோ ரெயில் செயலியில் ‘கியூ.ஆர்.’ குறியீட்டு முறையில் டிக்கெட் எடுக்கும் முறை அதிகம் ஊக்குவிக்கப்படும். தவிர்க்க முடியாத காரணத்தால் சுத்தம் செய்த டோக்கன் டிக்கெட் வழங்கப்படுகிறது. அதே சமயத்தில் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பரிசோதிக்கும் கருவி

தொடர்ந்து பிளாட்பாரத்திற்கு செல்லும் வழியில் உள்ள தானியங்கி கதவுகள் அருகில் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்ப்பதற்காக, நாட்டிலேயே முதன் முறையாக சென்னையில் உள்ள 32 ரெயில் நிலையங்களில் உள்ள தானியங்கி கதவுகளில், பயண அட்டையை பரிசோதிக்கும் கருவி (‘கார்டு ரீடர்’) பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படாமல் டிக்கெட் கவுண்ட்டர்களில் இருந்து விரைவாக பிளாட்பாரத்துக்கு பயணிகள் செல்ல முடியும்.

கூட்ட நெரிசலை தவிர்ப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ரெயில் நிலையங்களிலும் 5 முதல் 10 பணியாளர்கள் வரை கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் பயணிகள் நாள் ஒன்றுக்கு பயணம் செய்தனர். தற்போது நோய் தொற்று காரணமாக பலர் வீடுகளில் இருந்தப்படியே பணியாற்றி வருகின்றனர். இதனால் கூட்டம் அதிகம் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது.

43 ரெயில் சேவைகள்

அலுவலக நேரமான காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலான நேரத்தில் 5 நிமிட இடைவெளியில் ஒரு ரெயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ஒரு ரெயிலும் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 43 ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது. பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஏறி, இறங்க வேண்டியிருப்பதால் ரெயில் நிலையங்களில் 20 வினாடிகளுக்கு பதில் 50 வினாடிகள் ரெயில்கள் நிறுத்தப்படுகிறது.

சென்டிரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் வழித்தட சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் ஆலந்தூர் ரெயில் நிலையத்தில் மாறி விமான நிலையம் செல்லவேண்டும். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் திறமையாகவும், பாதுகாப்பாகவும் பயணிகளை கையாளுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் எந்த வித அச்சமும் இன்றி பயணிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story