வாணியம்பாடி அருகே பரபரப்பு -தி.மு.க. கிளை செயலாளர் மீது துப்பாக்கி சூடு


வாணியம்பாடி அருகே பரபரப்பு -தி.மு.க. கிளை செயலாளர் மீது துப்பாக்கி சூடு
x
தினத்தந்தி 17 Oct 2020 11:01 PM GMT (Updated: 17 Oct 2020 11:01 PM GMT)

வாணியம்பாடி அருகே தி.மு.க. கிளை செயலாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. செல்போனில் குண்டு பாய்ந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

வாணியம்பாடி, 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 50). அப்பகுதி தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார். வேலாயுதம் கடந்த உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து, அதே பகுதியைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் போட்டியிட்டார். அப்போது இருந்தே இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலாயுதம் தனது மோட்டார் சைக்கிளில் திம்மாம்பேட்டைக்கு சென்று விட்டு, இரவு 8 மணியளவில் வீடு திரும்பினார். மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் செல்ல முயன்றபோது, அவரது வீட்டுக்கு அருகில் பதுங்கியிருந்த மர்மநபர் அவரை நோக்கி திடீரென நாட்டுத்துப்பாக்கியால் சுட்டார்.

இதில் அவரது கழுத்து மற்றும் வயிறு பகுதியில் குண்டு பாய்ந்தது. மார்பை நோக்கி சீறிப்பாய்ந்த இரு குண்டுகள் அவருடைய சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனில் பட்டதால், மார்பு பகுதிக்குச் செல்லவில்லை. இதனால் அவர் உயிர் தப்பினார். துப்பாக்கியால் சுட்ட மர்மநபரும், அவருக்கு துணையாக வந்த மற்றொருவரும் தப்பியோடி விட்டனர்.

இந்த நிலையில், காயம் அடைந்த வேலாயுதம் முதலில் வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நேற்று காலை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தி.மு.க. கிளை செயலாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story