தர்மபுரி அருகே கிணற்றில் விழுந்த யானை வெற்றிகரமாக மீட்பு


தர்மபுரி அருகே கிணற்றில் விழுந்த யானை வெற்றிகரமாக மீட்பு
x
தினத்தந்தி 19 Nov 2020 3:30 PM GMT (Updated: 19 Nov 2020 3:32 PM GMT)

தர்மபுரி அருகே கிணற்றில் விழுந்த யானை 15 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சபள்ளி சின்னாறு அணையை அடுத்த ஏலகுண்டூர் என்ற இடத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றில் இன்று அதிகாலையில் பெண் யானை ஒன்று தவறி விழுந்தது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது, 50 அடி ஆழ கிணற்றுக்குள் யானை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்து வனத்துறையினர் 10 பேர் அப்பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் யானையை மீட்கும் பணி சுலபமாக இருக்கவில்லை. எனவே 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

முதலில் யானையை கயிறு கட்டி தூக்கியபோது, கயிறு நழுவி கிணற்றின் பக்கவாட்டில் உள்ள பகுதியில் யானை விழுந்தது. இதனையடுத்து மீண்டும் யானையை கயிறு கட்டி தூக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே மாவட்ட அட்சியர் கார்த்திகா, அப்பகுதிக்கு வந்து மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து சுமார் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, கிணற்றில் விழுந்த யானை வெற்றிகரமாக மீட்கப்பட்டது. மீட்புப் பணிகளின் போது யானையின் உடலில் 2 மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டன. மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் கிரேன் உதவியுடன் யானை மீட்கப்பட்டது.

யானையை வெற்றிகரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வாழ்த்து தெரிவித்தார். யானை தற்போது நலமாக இருப்பதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் யானையின் உடலை பரிசோதனை செய்த பிறகு, காட்டில் விட ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story