மாமல்லபுரத்தில் கைப்பற்றப்பட்ட பூதேவி சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு - கைதான 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு


மாமல்லபுரத்தில் கைப்பற்றப்பட்ட பூதேவி சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு - கைதான 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 29 Nov 2020 8:02 PM GMT (Updated: 29 Nov 2020 8:02 PM GMT)

சென்னை மாமல்லபுரத்தில் கைப்பற்றப்பட்ட பூதேவி சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. இதில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கும்பகோணம்,

சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரம் பக்கிங்ஹாம் கால்வாய் என்ற இடத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையில் போலீசார் சோதனையிட்டபோது, அதில் ஒரு உலோக சிலை இருந்தது.

விசாரணையில், அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் நெரும்பூர் இந்திரா நகர் 2-வது தெருவை சேர்ந்த வேல்குமார் (வயது 33), வீராபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த செல்வம் (38) ஆகியோர் என்பதும், அவர்களிடம் இருந்த சிலை 1½ அடி உயரமுள்ள பூதேவி உலோக அம்மன் சிலை என்பதும், இந்த சிலை தமிழகத்தில் உள்ள ஒரு கோவிலில் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் இருவரும் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சென்னை மாமல்லபுரத்தை சேர்ந்த செபஸ்டின் (35) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவரும் இந்த சிலை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அவர்கள் 3 பேரையும் நேற்று காலை சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதி விஜயகுமார் இல்லத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி அவர்களை வருகிற 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட 1½ அடி உயரமுள்ள பூதேவி உலோக சிலை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிலை எந்த கோவிலுக்கு சொந்தமானது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story