திருவண்ணாமலையில் நாளை பவுர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்படுமா? - பக்தர்கள் எதிர்பார்ப்பு


திருவண்ணாமலையில் நாளை பவுர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்படுமா? - பக்தர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 25 Jan 2021 11:04 PM GMT (Updated: 25 Jan 2021 11:04 PM GMT)

நாளை இரவு பவுர்ணமியையொட்டி கிரிவலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திருவண்ணாமலை,

ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் மத்திய, மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசின் அறிவுறுத்தலின் படி முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாளை (புதன்கிழமை) நள்ளிரவு தொடங்கி மறுநாள் 28-ந் தேதி நள்ளிரவு வரை பவுர்ணமி உள்ளது. கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளதால் நாளுக்கு நாள் திருவண்ணாமலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. மக்களும் கொரோனா அச்சமின்றி சாதாரணமாக வெளியில் நடமாட தொடங்கி விட்டனர்.

இந்த ஆண்டின் முதல் பவுர்ணமி என்பதால் பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல பக்தர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். எனவே குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Next Story