நில அபகரிப்பில் ஈடுபடும் தொண்டர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் கட்டுப்படுத்த வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


நில அபகரிப்பில் ஈடுபடும் தொண்டர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் கட்டுப்படுத்த வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 14 Feb 2021 3:17 AM GMT (Updated: 14 Feb 2021 3:17 AM GMT)

நில அபகரிப்பு செயலில் ஈடுபடும் தொண்டர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினருக்கு எதிரான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில் தனசேகரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘வீடு கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறேன். இதற்காக குன்றத்தூரில் சுமார் 53 ஏக்கர் நிலம் வாங்கினேன். அந்த இடத்தில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியபோது, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்து பணம் கேட்டனர். அதற்கு நான் சம்மதிக்காததால், என்னையும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களையும் மிரட்டுகின்றனர். எனவே, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் கமிஷனருக்கும், ஆவடி துணை போலீஸ் கமிஷனருக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர். இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஏராளமான புகார்கள்

குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் அடுத்தவர்கள் நிலத்தை அபகரிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர் என்று ஏராளமான புகார்கள் வருகின்றன. அரசியல் கட்சி என்பது பொதுமக்கள் நலனுக்காக பாடுபட வேண்டும். அதற்கு மாறாக நில அபகரிப்பு வேலைகளில் ஈடுபடக்கூடாது.

மனுதாரர் இதுகுறித்து புகார் செய்தபோது போலீசாரும் தீவிரமாக நடவடிக்கை எடுக்காதது துரதிருஷ்டவசமானது. இம்மாதிரியான சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் தங்கள் கட்சித் தொண்டர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் கட்டுப்படுத்த இதுவே சரியான நேரமாகும். தவறினால், பொதுமக்கள் மத்தியில் தங்கள் கட்சிப் பெயருக்கு குந்தகம் ஏற்படும்.

தேர்தல் செலவுக்குப் பணம் கேட்பது, அடுத்தவர் நிலத்தை அபகரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

சட்டப்படி நடவடிக்கை

அரசியல் கட்சியினரின் இதுபோன்ற செயல்கள், ஜனநாயகத்துக்கும், சட்டத்துக்கும் நேரடியாக சவால் விடுவது போல் உள்ளன. எந்த ஒரு நபரும், எந்த ஒரு அரசியல் கட்சியும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் சில புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், இந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மனுதாரர் நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்து, அதில் பந்தல் அமைத்து, நாற்காலிகளை போட்டு உட்கார்ந்துள்ளனர். இதுபோன்ற சட்ட விரோத செயல்களை எல்லாம் இந்த ஐகோர்ட்டு கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்காது.

மனுதாரருக்கு ஆவடி துணை போலீஸ் கமிஷனர் உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டும். நில அபகரிப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

பாதுகாப்பு செலவு

போலீஸ் பாதுகாப்பு வழங்குவதற்கு ஏற்படும் செலவுகளை, விரும்பினால் மனுதாரரிடம் வசூலித்துக் கொள்ளலாம். மேலும், குறிப்பிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு மனுதாரரை மிரட்டுவது, நிலத்தை அபகரிக்க முயற்சிப்பது போன்ற செயல்களில் எந்த ஒரு நபரும் ஈடுபடுவதை துணை போலீஸ் கமிஷனர் அனுமதிக்கக் கூடாது.

Next Story