நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவருக்கு நிபந்தனை ஜாமீன் ஐகோர்ட்டு உத்தரவு
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை டிசம்பர் 14-ந்தேதி கைது செய்தனர்.
சென்னை,
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை டிசம்பர் 14-ந்தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ஹேம்நாத் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு நீதிபதி வி.பாரதிதாசன் நேற்று விசாரித்தார்.
அப்போது அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் பிரபாவதி ஆஜராகி வாதிட்டார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரருக்கு எதிரான வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நிபந்தனை அடிப்படையில் ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்கினார். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மதுரையில் தங்கியிருந்து, அங்குள்ள அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் காலையும், மாலையும் ஹேம்நாத் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
ஹேம்நாத் மீது ஏற்கனவே பதிவான மோசடி வழக்கில் அவர் கடந்த டிசம்பர் 24-ந்தேதி கைது செய்யப்பட்டார். எனவே, சித்ராவின் தற்கொலை வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், தற்போது அவர் சிறையில் இருந்து வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
Related Tags :
Next Story