காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுவை,
புதுவை சட்டமன்றத்தை பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30, நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 என 33 பேர் இருப்பார்கள். கட்சி தாவல் நடவடிக்கை காரணமாக பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலுவின் பதவி பறிக்கப்பட்டது.
சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து மல்லாடி கிருஷ்ணாராவும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து நான்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், பெரும்பான்மை இழந்துள்ளது என எதிர்க்கட்சிகள் கூறிவந்தன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ,அமைச்சரவை ராஜினாமா செய்யப்போவது இல்லை எனவும், பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் எனவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story