தேர்தல் முடிவு நாளை வெளியாக உள்ள நிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


தேர்தல் முடிவு நாளை வெளியாக உள்ள நிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
x
தினத்தந்தி 30 April 2021 11:51 PM GMT (Updated: 30 April 2021 11:51 PM GMT)

தேர்தல் முடிவு நாளை வெளியாக உள்ள நிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் உடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6-ந்தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக வந்த தகவலைத்தொடர்ந்து, அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. காணொலிக்காட்சி மூலமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

அறிவுரை

வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுவதையொட்டி அதில் பங்கேற்கும் கட்சி முகவர்கள் சுற்று வாரியாக எண்ணப்படும் வாக்குகளை கண்ணும், கருத்துமாக கவனிக்கவேண்டும். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இடைவிடாமல் கண்காணிக்கவேண்டும். மேலும் ஐகோர்ட்டு வழங்கியுள்ள அறிவுரைகளின் அடிப்படையில் வெற்றிக் கொண்டாட்டங்களை வீட்டிலேயே நடத்திக்கொள்ளவேண்டும்.

சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் எந்தவித செயல்களிலும் கட்சியினர் ஈடுபடக்கூடாது. வாக்கு எண்ணிக்கை நாளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடனும் இணைந்து செயல்படவேண்டும். மேற்கண்ட உத்தரவுகளை நிர்வாகிகள் அனைவரும் முறையாக கடைப்பிடிக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.


Next Story