ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்புக்கிடையில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது எப்படி...?


ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்புக்கிடையில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது எப்படி...?
x
தினத்தந்தி 10 May 2021 8:35 AM GMT (Updated: 10 May 2021 8:35 AM GMT)

எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறித்து அதிமுக-வின் டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்துள்ளது. 65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க., சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது.

இந்த நிலையில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சி தலைவரை ( எதிர்க்கட்சி தலைவரை) தேர்ந்தெடுப்பதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 7-ந் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதில் காரசார விவாதம் நடைபெற்றது. முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே நேரடி கருத்து மோதலும் ஏற்பட்டது.

கட்சி அலுவலகத்துக்கு வெளியே இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதமும் நடைபெற்றது. எனவே அன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதை முடிவு செய்ய முடியாமல் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்தது.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மீண்டும் 10-ந் தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கு கட்டுப்பாட்டின்படி அரசு கூட்டங்கள் தவிர்த்து பிற கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது. எனினும் புதிய சட்டமன்றம் நாளை (செவ்வாய்க்கிழமை) கூட இருப்பதால், எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை திட்டமிட்டபடி இன்று நடத்துவதற்கு அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான நா.பாலகங்கா நேற்று மனு அளித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடித்து தொண்டர்கள் கூட்டம் இன்றி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்படும் என்று கூறி, கூட்டத்துக்கு அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

போலீசார் தரப்பிலும் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட சிறப்பு போலீஸ் படை குவிக்கப்பட்டனர். லத்தியுடன் போலீஸ் லத்தி உள்ளிட்ட கலவரத் தடுப்பு ஆயுதங்களுடன் அவர்கள் தயார் நிலையில் இருந்தனர் அதனால் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவானது.  

காலை 8.30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கூட்டம் தொடங்கியது. கூட்டம் நடக்கும் அலுவலகம் முன்ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி  ஆதரவாளர்கள் திரண்டனர்.  அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்  வந்ததும் கூட்டம் தொடங்கியது.

ம்ொத்தம் உள்ள 65 எம்.எல்.ஏக்களில் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக  61 எம்.எல் .ஏக்கள் ஆதரவு  தெரிவித்து உள்ளனர்.அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்த ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி என்பதால் அவருக்குத்தான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக மூத்த தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.

கொங்குமண்டலம், மத்திய மண்டலம், தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பலரும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் பா.ஜனதா மேலிடம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் வெளியில் தெரிவித்து வந்தனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளதால் அவர் எதிர்க்கட்சி தலைவராக வருவதுதான் சரியாக இருக்கும் என்று தெரிவித்து வந்தனர்.


61 எம்.எல்.ஏக்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதால் அவரை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுப்பதுதான் முறையாக இருக்கும் என்று யோசனை தெரிவித்தனர். கட்சியை கட்டுக்கோப்பாக கொண்டு செல்ல நீங்களும் அனுசரித்து செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். அவர்கள் கூறிய யோசனைகளை ஓ.பன்னீர்செல்வமும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

கூட்டத்தில், நீண்ட விவாதங்களுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில், "தமிழக சட்டசபையின்  எதிர்க்கட்சித் தலைவராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை அடுத்து,எடப்பாடி பழனிசாமி  ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்துக்கு வெளியே உற்சாகமாக அவருக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இம்முடிவால் ஓ.பன்னீர் செலவம்  அதிருப்தியடைந்ததாகக் கூறப்படும் நிலையில், கூட்டம் முடிந்தபின் முதல் ஆளாக வெளியேறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story