கொரோனா காலத்தில் தனியார் ஆஸ்பத்திரிகள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்


கொரோனா காலத்தில் தனியார் ஆஸ்பத்திரிகள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 May 2021 1:06 AM GMT (Updated: 14 May 2021 1:06 AM GMT)

கொரோனா காலத்தில் தனியார் ஆஸ்பத்திரிகள் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், நோய் முற்றிய நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளிகளை அனுப்பக்கூடாது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- முழு ஊரடங்கு எப்போது இருந்து தீவிரமாக்கப்படும்?

பதில்:- அதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடக்கிறது. அதனைத்தொடர்ந்து இது நடைமுறைப்படுத்தப்படும்.

கேள்வி:- தனியார் மருத்துவக்கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படுமா?

பதில்:- மியாட், வேலம்மாள் உள்பட பல தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏராளமான படுக்கைகளை வழங்க முன்வந்துள்ளனர். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்

கேள்வி:- கொரோனா முற்றிய நிலையில் நோயாளிகளை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தனியார் ஆஸ்பத்திரிகள் அனுப்பி வைக்கின்றன என குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?

பதில்:- சில தனியார் ஆஸ்பத்திரிகள் அதிக கட்டணத்தை வாங்கிக்கொண்டு கடைசி நேரத்தில் நோயாளிகளை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வருவதாக புகார்கள் எழுகிறது. சில தனியார் ஆஸ்பத்திரிகள் மனசாட்சி இல்லாமல் இதுபோல நடந்துகொள்கின்றன. ஆக்சிஜன் வசதி இல்லாத சிறிய அளவிலான தனியார் ஆஸ்பத்திரிகள் இதுபோன்ற வேலைகளை செய்கிறார்கள். அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறோம். நோயாளிகளை அனுமதிக்கும்போதே இவர்களை காப்பாற்ற முடியும் என்ற முழு நம்பிக்கை இருந்தால்தான் சிகிச்சை கொடுக்க தொடங்கவேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மட்டும் சிகிச்சை அளித்துவிட்டு அடுத்தக்கட்ட பிரச்சினைகளை அரசு ஆஸ்பத்திரிகளில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறுவது தவறான விஷயமாகும். எந்த தனியார் ஆஸ்பத்திரியாக இருந்தாலும் சரி மனிதாபிமானம் இல்லாமல், இப்பேரிடர் காலத்தில் சம்பாதிக்கும் காலமாக பார்க்காமல் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.

ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காமல் போனால்

கேள்வி:- ரெம்டெசிவிர் மருந்துகள் கூடுதலாக தமிழகத்துக்கு வருமா?

பதில்:- இப்போது அனுப்புகிற 7 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் போதாது. 20 ஆயிரம் எண்ணிக்கையில் மருந்துகள் வேண்டும் என்று மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். உற்பத்தி குறைவாக உள்ளது. அடுத்த மாதம் உற்பத்தி கூடுகிறபோது கூடுதல் மருந்துகள் தருகிறோம் என்று அவர் கூறியிருக்கிறார்.

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில்

கேள்வி:- ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சுகள் பல மணி நேரங்களாக நின்றுகொண்டிருப்பது தொடர்கதையாகி வருகிறதே?

பதில்:- ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு பல தனியார் ஆஸ்பத்திரிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் படையெடுத்து வருகிறார்கள். அதனால்தான் அங்கு மட்டும் ஆம்புலன்சுகள் வரிசை கட்டி நிற்கும் சூழல் ஏற்படுகிறது. இந்த நிலைமையை போக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேற்கண்டவாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.

ஆய்வு

முன்னதாக சென்னை கிண்டி கிங் கொரோனா சிறப்பு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், ‘நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் 850 ஆக்சிஜன் படுக்கைகள் தயாராகிவிடும்’ என தெரிவித்தார். 

Next Story