மத்திய அரசின் செயலை கண்டிக்கும் விதமாகவே ஆலோசனைக் கூட்டம் புறக்கணிப்பு - அமைச்சர் தகவல்


மத்திய அரசின் செயலை கண்டிக்கும் விதமாகவே ஆலோசனைக் கூட்டம் புறக்கணிப்பு - அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 17 May 2021 6:52 AM GMT (Updated: 17 May 2021 12:06 PM GMT)

மத்திய அரசின் செயலை கண்டிக்கும் விதமாகவே புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை

மத்திய அரசு 2020ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவந்தது. அதில் உள்ள பல்வேறு அம்சங்களைத் தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்தன. தமிழகத்தில் கல்வியாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். திமுக அதன் தோழமைக் கட்சிகளுடன் கடுமையாக எதிர்த்து போராட்டங்களை நடத்தியது.

தொழில்கள் பயில்வது குறித்த கல்விக் கொள்கையின் திட்டத்தையும் எதிர்த்தனர். கல்வி என்பது சாதாரண மக்களை மேம்படுத்தும் வண்ணம் இல்லாததும், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் அம்சங்கள் இருப்பதாகவும் கூறி எதிர்த்தனர். மத்திய அரசு கூட்டிய கூட்டங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் துறைச் செயலர்கள் கலந்துகொண்டனர்.

திமுக அரசு அமைந்ததும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பேற்றார். புதிய கல்விக் கொள்கை, இணையவழிக் கல்வி, கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் அனைத்து மாநிலக் கல்விச் செயலாளர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்தியக் கல்வி அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில், இக்கூட்டத்தை அமைச்சர்கள் நிலையில் நடத்த வேண்டும் என்று கேட்டிருந்தார். அமைச்சர்கள் நிலையில் கூட்டத்தை நடத்தும்போது புதிய கல்விக் கொள்கை தொடர்பான தனது கருத்துகளையும், பரிந்துரைகளையும் தெரிவிக்க தாம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆனால், தமிழக அரசின் இந்தக் கருத்துக்கு மத்திய அரசு பதிலேதும் அளிக்காமல் கூட்டத்தை திட்டமிட்டபடி இன்று நடத்தியது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சகம் மாநிலக் கல்வித்துறைச் செயலாளர்களுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்தது.

மாநில அமைச்சரை ஆலோசனைக்கு அழைக்காமல் துறை அதிகாரியை மத்திய அரசு அழைத்தது கண்டிக்கத்தக்கது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மத்திய அரசின் செயலை கண்டிக்கும் விதமாகவே தமிழக அரசு ஆலோசனையை புறக்கணித்தது.

புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. 3,5 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

மத்திய பா.ஜ.க அரசுடன் மோதல் போக்குடன் செயல்பட வேண்டும் என்பது எங்களின் நோக்கம் இல்லை.

இருமொழிக் கொள்கையை ஒழித்து, மும்மொழிக் கொள்கையை திணிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கை உள்ளது என கூறினார்

Next Story