ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டம்: நல்லக்கண்ணு, வைகோ உள்பட 13 பேர் மீதான வழக்குகள் வாபஸ்


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டம்: நல்லக்கண்ணு, வைகோ உள்பட 13 பேர் மீதான வழக்குகள் வாபஸ்
x
தினத்தந்தி 26 May 2021 11:02 PM GMT (Updated: 26 May 2021 11:02 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டம் தொடர்பாக நல்லக்கண்ணு, வைகோ உள்பட 13 பேர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

சென்னை,

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந்தேதி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த 14-ந்தேதி சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த இடைக்கால அறிக்கையை அரசு கவனமாகப் பரிசீலித்தது. ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர 38 வழக்குகளைத் திரும்பப் பெற்றிடவும், அதில் தொடர்புடைய அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெறவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

வழக்குகள் வாபஸ்

அதன்படி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு, மாவட்ட செயலாளர் அழகு முத்துபாண்டியன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ராஜா, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், தி.மு.க. மாவட்ட செயலாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் பாலசிங்,

இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பூமயில், ஆம் ஆத்மி கட்சியின் துணை செயலாளர் ஆர்தர் மச்சோடா உள்பட 13 பேர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story